5 ஜூன், 2010

நல்லிணக்க ஆணைக்குழு போதுமானதல்ல! சர்வதேச விசாரணை தேவை!!

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிலிப் அல்ஸ்ரன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் கையளித்துள்ள வருடாந்த அறிக்கையிலேயே இது குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் இறுதிக் காலப்பகுதியில் 30,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், இப் போரின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவர் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந் நிலையில், இச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மகிந்தவினால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் போதுமானதல்ல என அவர் தெரிவித்துள்ளார். இவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந் நிலையில், இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது சர்வதேச நியமங்களுக்கு எதிரான வகையில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பாரபட்சமற்ற முறையில் நீதியான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உண்மைகள் கண்டறிப்பட வேண்டியதும், உரிய பரிந்துரைகளை முன்வைக்க வேண்டியதும் மிக அவசியமானதாகும்.

இத்தகைய சூழ்நிலைகளில் இலங்கை போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என பிலிப் அல்ஸ்ரன் தனது வருடாந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக