5 ஜூன், 2010

இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் கருணாநிதி: விஜய.டி. ராஜேந்தர்






ஒரு காலத்தில் தமிழ்மொழியை காத்த தலைவர் என்ற பெயரை சுமந்து நின்ற கருணாநிதி, இன்று இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் என்று கூறினார் லட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய. டி. ராஜேந்தர்.

தமிழினக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற உள்ள தமிழர் மீட்சி மாநாடு குறித்த அறிவிப்பு தொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:

நடைபெற உள்ள தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழர் ஆட்சி மாநாடு ஆளும் கட்சியின் மாநாடு. ஆனால் ஜூன் 12-ம் தேதி நடைபெறும் மாநாடோ தமிழர்களுக்காக நடத்தப்படும் தமிழர் மீட்சி மாநாடாகும்.

தெலங்கான பிரச்னை என்றால் தெலங்கான பகுதிகளில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்துகின்றன. காவிரி விவகாரம் என்றால் கன்னடர் என்ற உணர்வோடு கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபடுகின்றன. இது போன்ற அவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் செத்து மடிந்தபோதுகூட இங்குள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேரவில்லை. இலங்கையில் தமிழர்கள் பகுதி சுடுகாடாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் செம்மொழி மாநாடா? தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நான் எதிர்க்கவில்லை, ஏனென்றால் அது என் மொழி மாநாடு.

கருணாநிதி 5-வது முறையாக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அவரால் தமிழகத்தில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க முடியவில்லை. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகிவிட்டது. இப்போதும் இதற்காக அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார் ராஜேந்தர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக