24 மே, 2010

வாகனங்களைத் தேடும் வன்னி மக்கள்




யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்கள் கிளிநொச்சியில் கொண்டுவந்து குவிக்கப்படும் நிலையில் தமது வாகனங்களைத் தேடி மக்கள் அலையாய் அலைகின்றனர்.

கடந்தவாரம் வரையில் 6250 மோட்டார் சைக்கிள்களும் 11ஆயிரம் சைக்கிள்களும் 45 ஏனைய ரக வாகனங்களும் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்திற்கு எதிர்புறமாக திருநகர்செல்லும் வீதிக்கு அருகேயுள்ள வளாகத்தில் கொண்டுவந்து குவிக்கப்பட்டுள்ளன.

தற்போது உள்ள வாகனங்களை விடவும் மேலும் பத்தாயிரம் மோட்டார் வண்டிகளும் ஏனைய வாகனங்களும் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்படவுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் இதற்கான திகதி குறித்து தெளிவாக கூறமுடியாது என வாகனங்கள் கொண்டு வந்து இறக்கப்படும் வளாகத்தில் பணிபுரிபவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது வாகனத்தை மீளப்பெற்றுக் கொள்வதற்காக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து சென்றவர்கள் முகாம்களில் இருந்தும் வவுனியா யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் இருந்தும் கிளிநொச்சி வந்து வாகனங்களை தேடிவருகின்றனர்.

குறித்த திகதியில் வாகனங்கள் கையளிக்கப்படும் என எத்தனையோ திகதிகள் குறிக்கப்பட்டு அவை கடந்து போயுள்ள நிலையில் தற்போது இம்மாதம் 27ஆம் திகதி வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பிள்ளைகளை இழந்த பெற்றோர் பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்திக் கொண்டு பிள்ளைகளைத் தேடுவது போன்று தமது வாகனங்களின் படங்களுடன் தேடுதல் நடவடிக்கையில் மக்கள் அலைந்து திரிகின்றனர். கொண்டுவரப்பட்டுள்ள வாகனங்களில் அநேகமானவற்றின் பெறுமதி மிக்க பாகங்கள் அகற்றப்பட்ட நிலையில் அன்றேல் இல்லாத நிலையிலேயே கிளிநொச்சியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வாகனங்களைத் தேடும் சிலர் கவலை வெளியிட்டனர்.

இப்படியான நிலையில் வாகனங்களைப்பார்த்து நொந்து போவதைவிட தம் உயிராக கருதிய வாகனங்களை காணமல் இருந்திருந்தால் பரவாயில்லை என அங்கலாய்க்கும் மக்களையும் கிளிநொச்சியில் வாகனங்கள் கொண்டுவந்து குவிக்கப்படும் இடத்தில் காணமுடிகின்றது.

தற்போதும் வவுனியா மெனிக் பாம் முகாமில் இருக்கின்ற 46வயதுடைய ஒருவர் கருத்து வெளியிடுகையில், கடந்த வாரத்தில் கிளிநொச்சிக்கு வந்து தமது வாகனங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் கருத்துவெளியிடுகையில்,

"என்னிடம் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரு ட்ரக்டரும் இருந்தன ஆனால் தற்போது எதுவுமே இல்லை இங்கே ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ள போதும் என்னுடைய வாகனங்கள் எதனையும் காண முடியவில்லை. என்னுடைய வாகனத்தை என்னால் இனங்காண முடியும் பிள்ளைகளைப் போன்று பராமரித்த வாகனம் பலவருடங்களாக நான் பராமரித்த வாகனம் அதனை என்னால் இனங்காணமுடியும்.

ஆனால், இங்கு காணவில்லை. இங்குள்ள வாகனங்களைப் பார்க்கும் போது என்னுடைய வாகனத்திற்கு என்னவாகியிருக்குமோ எனக் கவலை ஏற்படுகின்றது. நாங்கள் மாங்குளம் அம்பகாமம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ஆனால் தொடர்ந்தும் வவுனியா மெனிக் பாம் முகாமிலேயே வைக்கப்பட்டுள்ளோம் எமது பகுதியில் இன்னமும் மீள் குடியேற்றம் இடம்பெறவில்லை ஏன் என்று எமக்கு புரியவில்லை" என்றார்.

யுத்தத்திற்கு முன்பாக வன்னிப்பகுதியில் ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களைச்சேர்நத மூன்று லட்சம் மக்கள் வாழ்ந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் குறைந்தது இரண்டு சைக்கிள்கள் காணப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி வன்னியில் மொத்தமாக ஒருலட்சத்திற்கு அதிகமான சைக்கிள்கள் இருந்திருக்கக் கூடும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனைத்தவிர வன்னியில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களும் ஆயிரக்கணக்கான உழவு இயந்திரங்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக