12 மே, 2010

மேலதிக பாதுகாப்புடன் சரத் தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் : நீதிமன்றம் உத்தரவு(பட இணைப்பு

இராணுவக் கட்டுப்பாட்டில் கடற்படைத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை இராணுவக் கட்டுப்பாட்டிலேயே மேலதிக பாதுகாப்புடன் தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

இறுதிக்கட்ட மோதல் நடைபெற்றபோது வெள்ளைக் கொடியேந்தி வந்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலர் உத்தரவிட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகமொன்றுக்கு தகவல் வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் பிரதான நீதவான் சம்பா ஜானகி ராஜரட்ண முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இது நாட்டுக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகக் குற்றம் சுமத்திய பாதுகாப்புத் தரப்பினர் சர்வதேசத்தின் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்ததாகவும் மன்றில் சுட்டிக்காட்டினர். பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார இது தொடர்பான வாதத்தை முன்வைத்தார்.

சரத் பொன்சேகா சார்பில் மன்றில் வாதிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி நலீன் லத்துவஹெட்டி, பொன்சேகாவின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கருதி தொடர்ச்சியாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் வைக்கப் பணிக்குமாறு கோரினார்.

அதே கருத்தினை மனுதாரர்களும் முன்வைத்ததால், சிறைச்சாலையில் தடுத்துவைக்க முடியாத காரணத்தினால் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவக் கட்டுப்பாட்டில் வைக்க உத்தரவிடுவதாகவும் அவரது பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்தினர் முழுக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் நீதவான் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில் இந்த வழக்கினை விசேடமாகக் கொள்வதாகக் குறிப்பிட்ட நீதவான் எதிர்வரும் 26ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார்.

வழக்கு விசாரணைகளையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நேற்றைய தினம் விசேட சோதனைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக