31 மே, 2010

இலங்கை திரைப்பட விழாவில் பங்கேற்க நமீதா மறுப்பு


இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று நடிகை நமீதா கூறியுள்ளார்.

அதன் தொடக்க விழாவில் சிறப்பு நடனமாட அவருக்கு விழாக்குழு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து நமீதா கூறியிருப்பதாவது:

இலங்கை திரைப்பட விழாவுக்காக சில தினங்களுக்கு முன் என்னிடம் தொடர்பு கொண்டார்கள். விழாவில் நடனமாடுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காக பெரும் தொகை தருவதாக கூறினர்.

இலங்கையில் நடைபெறும் அந்த விழா தொடர்பாக தமிழ் திரையுலகில் எதிர்ப்பு இருக்கும்போது என்னால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டேன்.

திரையுலகில் எனக்கு வாழ்வு கொடுத்தது தமிழர்கள் தான். எனது புகழுக்கு காரணமும் அவர்களே. எனவே, என்னிடம் வேறு யாரும் அறிவுரை கூறும் முன்னர், நானே அந்த விழாவில் பங்குபெற முடியாது என்று பதில் கூறிவிட்டேன்.

வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை.

இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.

இலங்கையில் ஏராளமான அப்பாவித் தமிழர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றது மற்றும் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபையும் ஐநா சபையும் கோரிக்கை விடுத்துள்ளன.

இதனிடையே இலங்கை ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டில் நடைபெறும் திரைப்பட விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று தமிழ் திரையுலகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

மேலும், சர்வதேச திரைப்பட விழாவை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும் அந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என்றும் அதன் விளம்பரத் தூதரான நடிகர் அமிதாப் பச்சனுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக