12 ஏப்ரல், 2010

புத்தளம் நகரசபை தலைவரின் வீட்டைத் தாக்க முயற்சி


புத்தளம் நகரசபை தலைவர் எம்.என்.எம்.நஸ்மியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்த வந்த கும்பலை கலைக்க பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்து அவர்களை விரட்டியடித்துள்ளனர்.இச்சம்பவம் இன்று அதிகாலை புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

புத்தளம் ஜாவுசன் பள்ளி வீதியில் அமைந்துள்ள நகரசபை தலைவரின் வீட்டை நோக்கி அதிகாலை 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல், தலைவரின் வீட்டுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.

வந்த கும்பல் உரத்த குரலில் சத்தமிட்டதை அறிந்து கொண்ட நகர சபை தலைவரின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றும் பொலிஸார், தாக்குதல் நடத்த வந்த கும்பலை வீட்டுக்குள் நுழைய வேண்டாம் என்று எச்சரித்தும் அதனைப் பொருட்படுத்தாது நுழைய முற்படுகையில் துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

இதனையடுத்து இக்கும்பல் தப்பி சென்றுள்ளது. இச்செய்தி கிட்டியதும் புத்தளம் பொலிஸார் உடனடியாக ஸ்தலத்திற்கு விஜயம் செய்து உரிய மேலதிக பாதுகாப்பினை வழங்கியுள்ளனர்.

இது குறித்து புத்தளம் நகரசபை தலைவர் எம்.என்.எம்.நஸ்மி புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக