22 ஏப்ரல், 2010

21.04.2010 தாயகக்குரல்

225 உறுப்பினர்களைக் கொண்ட ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை நடைபெறும். பொதுத் தேர்தலின்போது முறைகேடுகள் நடந்ததாக கண்டி நாவலப்பிட்டி, மற்றும் திருகோணமலை கும்புறுப்பிட்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் இறுதி தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. மேற்படி இடங்களுக்கான மறுதேர்தல் நேற்று நடைபெற்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப் பட்டியல் உட்பட 144 பிரதிநிதி;களைப் பெற்றுள்ளது. மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு 150 பிரதிநிதிகளைப் பெற அரசுக்கு இன்னும் ஆறு பிரதிநிதிகள் தேவை. மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு பலகட்சிகளுடன் பேச்சு நடத்தப் போவதாக சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

குறுகிய அரசியல் இலாபத்தைக் கருத்தில் கொள்ளாது தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை முற்றாகத் தீர்க்கும் வகையில் புதிய அரசியலமைப்புத் திருத்தங்களை கொண்டு வந்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு வழங்கும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கேட்ட அரசுக்கு அந்த பெரும்பான்மையை மக்கள் வழங்கவில்லை. வடக்கு கிழக்கு மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமே தமது ஆணையை வழங்கியுள்ளனர் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் ஒத்துழைக்க இரண்டு நிபந்தனைகளை அறிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை வைக்கவேண்டும். மீள்குடியேறிய மக்களின் உடனடிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் என்பது அந்த நிபந்தனைகளாகும்.

தமிழ் மக்களிடம் இருந்து தமக்கு மக்கள் ஆணை கிடைத்திருப்பதாகவும் அரசு அதை மதித்து செயல்படவேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் அர்த்தம்தான் என்ன?. தமிழ் தரப்பில் தங்களுடன் மட்டும்தான் அரசு பேசவேண்டும் என கூறுகிறார்களா?.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண தங்களை அனுப்பும்படி ஆணை கேட்டுத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 14 பிரதிநிதிகளைப் பெற்றுள்ளது. எனவே இவர்களும் மக்கள் ஆணையை மதித்து எதிர்ப்பு அரசியலை விட்டு தந்திரோபாயமான செயல்பாடுகளால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும். இல்லையேல் 5 வருடத்தின் பின்னர் மீண்டும் மக்களாணை கேட்டு மக்களிடம் செல்லமுடியாத நிலை ஏற்படலாம்.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை வைக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் கேட்கிறது. மக்கள் பிரதிநிதிகளான இவர்களல்லவா மக்கள் ஏற்றுக்கொள்ளகூடிய அரசியல் தீர்வு என்ன என்பதும் அதை எவ்வாறு வென்றெடுக்கலாம் என்பதில் தெளிவான நிலைப்பாடும் இருக்கவேண்டும்.

தமிழ் கூட்டமைப்புக்கு மக்களாணை கிடைத்துவிட்டது. ஆகவே மக்கள் ஆணையை அரசு மதிக்கவேண்டும் என்று கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரா.சம்பந்தன் யாழ்ப்பாண வாக்களிப்பு வீதம் குறைந்ததையிட்டு கவலை தெரிவிக்கிறார். அதற்கு காரணம் மக்களுக்கு அரசு மேல் கொண்ட நம்பிக்கையின்மையே என்றும் காரணம் கூறுகிறார். யாழ் மக்கள் அரசின்மேல் நம்பிக்கையின்மை கொண்டிருந்தால் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்று பிரதிநிதிகளை தேர்ந்திருக்க தேவையில்லை. தமிழ் தேசியக் கூட்மைப்பின் மேல் உள்ள நம்பிக்கையின்மைதான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைத்த வெற்றியாகும்.

2004ம் ஆண்டு பொது தேர்தலில் 2 லட்சத்து 69 ஆயிரம் வாக்குகளுடன் எட்டு பிரதிநிதிகளை யாழ் குடாநாட்டில் பெற்ற கூட்டமைப்பு இந்த தேர்தலில் 65119 வாக்குகளுடன் ஐந்து பிரதிநிதிகளையே பெற்றுள்ளமை கூட்டமைப்பில் மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளமையையே காட்டுகிறது.

வடக்கு கிழக்கில் 22 பிரதிநிதிகளை கொண்டிருந்த கூட்டமைப்பு இம்முறை 14 ஆசனங்களையே பெற்றநிலையில் அவர்கள் இழந்த எட்டு ஆசனங்களையும் அரசு பெற்றிருப்பது அரசின்மேல் மக்களுக்கு நம்பிக்கையின்மை இருப்பதாக இரா சம்பந்தன் கூறியதை ஆதாரமற்றதாக்கியுள்ளன. யாழ்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள்ஙீல் பல்லின மக்கள் வாழ்வதால் அங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசிலுக்கு அப்பால் தமிழ் பிரதிநித்துவத்தின் எண்ணிக்கையே முதலிடம் வகிக்கும். தமிழ் தினசரிகளும் தமிழ் தேசியத்தையே வலியுறுத்தியிருந்தன.

யாழ் மாவட்டம் வித்தியாசமானது. அங்கு தமிழ் பிரதிநித்துவம் என்ற பேச்சு அவசியமற்றது. இந்த நிலையில்தான் யாழ் மக்கள் தங்கள் தீர்ப்பை சுதந்திரமாக தீர்மானித்து வாக்களித்துள்ளனர். யாழ் குடாநாட்டில் வாக்களித்த மக்களில் 83ஆயிரம்பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வாக்கை விட 18ஆயிரத்துக்கு மேற்பட்டோர் எதிராக வாக்களித்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் மொத்தமாக பெற்ற வாக்கு 2 ,33,168 வாக்குகளாகும். கூட்டமைப்பில் மக்கள் நம்பிக்கை இழக்க காரணம் என்ன ?

கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்கள் ஆணை பெற்று பாராளுமன்றம் சென்ற தமிழ் தலைவர்கள் மக்களுக்கு எந்த உரிமையையும் பெற்றுக்கொடுக்கவில்லை. கடைசியில் தமிழ் மக்கள் மக்கள் இருந்த உரிமைகளை; இழந்து, உயிர் உடமைகளை இழந்து அகதி வாழ்க்கைக்கு தள்ளப்பட்டதுதான் மிச்சம். எனவே மக்கள் விரக்தியுற்ற நிலையில் உள்ளனர். இந்த நிலை நீடித்தால் மக்கள் சாட்சிக்காரன் வேண்டாம் என்று சண்டைக்காரன் காலில் முழுமையாக சரணடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக