22 ஏப்ரல், 2010

புது சீடருடன் செக்ஸ் சாமியார் நித்யானந்தா சிக்கினார்





பெங்களூரு : ஐம்பது நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா, இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். குடிசை வீட்டிலிருந்த அவரும், அவரது சீடர் ஒருவரும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணம், 7,000 அமெரிக்க டாலர், வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழ் நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த தகவல் வெளியானது. இந்த தகவலால் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்யானந்தா தியான பீடம் உட்பட இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரமத்தின் ஒரு பகுதியில் இருந்த குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. நித்யானந்தா, ஹரித்வார் கும்பமேளாவிற்கு சென்றிருப்பதாக, ஆசிரமவாசிகள் தெரிவித்தனர். பிடதி தியான பீடத்திலிருந்து அவரது சீடர்கள் பலர் வெளியேறினர். சீடர்களில் ஒருவரான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த நித்ய தர்மானந்தா என்கிற லெனின், சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து புகார் கூறினார். நித்யானந்தா சம்பந்தப்பட்ட 'சிடி'யையும் அவரிடம் ஒப்படைத்தார். சாமியார் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, இயற்கைக்கு விரோதமாக செக்ஸ் உறவு வைத்தல், கொலை மிரட்டல், சதி செய்தல் என ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்குகள் தொடர்பான அனைத்து சம்பவங்களும் கர்நாடகாவில் நடந்துள்ளதால் வழக்குகள், கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டன. நித்யானந்தா, மூன்று முறை வீடியோவில் தோன்றி, தன் நிலையை விளக்கினார். நித்யானந்தா மீதான இரு வழக்குகளை தவிர, மற்ற வழக்குகள் அனைத்தையும் கர்நாடகா சி.ஐ.டி., போலீசார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. சி.ஐ.டி., போலீசார், பிடதி ஆசிரமத்தில் மூன்று முறை சோதனையிட்டனர். அங்கு முக்கிய தஸ்தாவேஜுகளை கைப்பற்றினர். இந்த சூழ்நிலையில் சாமியார் நித்யானந்தா, ஆசிரமத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிக்கை வெளியிட்டார். கடந்த 20ம் தேதி நித்யானந்தா ஆசிரமத்தில், சி.ஐ.டி., போலீசார் திடீர் சோதனை நடத்தினர். முக்கியமான டாக்குமென்டுகள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சி.ஐ.டி., போலீசார் நடத்திய சோதனையில், நித்யானந்தா இருக்குமிடம் தெரியவந்தது.

இதே வேளையில், நித்யானந்தாவை , சி.ஐ.டி., போலீசார், இந்தியா முழுவதும் ஒவ்வொரு பகுதியாக தேடி வந்தனர். இமாச்சல பிரதேச போலீசாருடன் இணைந்து, கர்நாடகா மாநில சி.ஐ.டி., போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை, அங்குள்ள சோலன் மாவட்ட அர்கி என்ற இடத்தில் நித்யானந்தா இருப்பதாக தகவல் கிடைத்தது. இரு மாநில போலீசாரும் அங்கு விரைந்தனர். நித்யானந்தாவும், அவருடன் இருந்த நித்ய பக்தானந்தா என்ற கோபால் சீலம் ரெட்டியும் பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் பிடதி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

முன்ஜாமீன் கோரிய மனுவில், நித்யானந்தாவின் கையெழுத்து வாங்குவதற்காக நித்ய பக்தானந்தா இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது தான் அவரும் பிடிபட்டார். இமாச்சல பிரதேசத்தில் நித்யானந்தாவும், நித்ய பக்தானந்தாவும் குடிசை போன்ற வீட்டில் இருந்தனர். போலீசார் அவ்வீட்டை சுற்றி வளைத்து, அவர்களை கைது செய்தனர். அந்த வீட்டிலிருந்த லேப்-டாப், மூன்று லட்சம் ரூபாய் பணமும், ஏழு ஆயிரம் அமெரிக்க டாலர், டிராவலர் செக்குகள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அர்கி கோர்ட்டில், மாஜிஸ்திரேட் முன்னிலையில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட பின், முறைப்படி அனுமதி பெற்று, பெங்களூருக்கு அவர்களை போலீசார் அழைத்து வருகின்றனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நித்யானந்தா தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு, நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஹூன்குந்த் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக