22 ஏப்ரல், 2010

ஐ.தே.கூட்டணியிலிருந்து விலகினார் மனோ கணேசன்



ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகியுள்ளதாக முன்னணித் தகவல்கள் சற்று முன்னர் தெரிவித்தன.

அதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியின் செயற்குழுக் கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐ.தே.முன்னணியிலிருந்து விலகினாரா? விலக்கப்பட்டாரா? : விரைவில் மனோ விளக்கம்

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து விலகிய ஜனநாயக மக்கள் முன்னணி தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் சற்றுமுன்னர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

தேசியப் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை என்பதால் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது.

இதனால் ஜனநாயக மக்கள் முன்னணியைத் தமது கூட்டமைப்பிலிருந்து நீக்கியதாக ஐக்கிய தேசிய கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் தமது கட்சி சுயமாக முடிவெடுத்து விலகியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் அலுவலகம் தெரிவிக்கிறது.

கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர்கள் இருவரை கடந்த பொதுத் தேர்தலில் நிறுத்துவது தொடர்பில் ஏற்கனவே ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மனோ கணேசனுக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவியது.

அது தொடர்பான கூட்டமொன்றில் கட்சியுடன் முரண்பட்ட மனோ கணேசன், இடைநடுவே எழுந்து வந்து தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட அவர், தோல்வியுற்றதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி தனது தேசியப்பட்டியலில் இடம் ஒதுக்கவில்லை.

இந்த விடயம் தொடர்பில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் விரைவில் (இன்று அல்லது நாளை) தனது முடிவினை அறிவிப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக