5 ஜனவரி, 2010

இலங்கைத் தமிழருக்கு அரசியல் தீர்வு கிடைத்தால்தான் சந்திரசேகரனின் ஆன்மா சாந்தியடையும் - திருமாவளவன்

அமைச்சர் சந்திரசேகரனின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்தாக வேண்டும்" என தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
மறைந்த அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகள் நேற்று தலவாக்கலையில் நடைபெற்றன. நேற்றைய அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"இன்று அவரது அஞ்சலிக் கூட்டத்தில் ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் சந்திரசேகரனின் நோக்கம் பற்றிப் பேசுவது பொருத்தமானதாகும்.
மக்கள் மனதில் எப்போதும் நீங்காத இடம்பிடித்துக் கொண்ட அமைச்சர் சந்திரசேகரன் மலையக எம் உறவுகள் மீதும் பூர்வீக தமிழர்கள் மீதும் இணையில்லாத பற்றுக் கொண்டிருந்தார். எமது மக்களுக்கு விடிவு வேண்டும் என எப்போதுமே கூறிவந்தார்.
நாம் இலங்கை வந்திருந்தபோது அமைச்சர் சந்திரசேகரனையும் சந்தித்தோம். அப்போது இலங்கைத் தமிழ் மக்களது நலன் பற்றி அக்கறையுடன் பேசினார்.
இலங்கை மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தி வந்த அமைச்சர் சந்திரசேகரனின் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும்.
மலையக மக்களின் அபிவிருத்திக்காகவும் பூர்வீக தமிழர்களின் விடிவுக்காகவும் இந்திய அரசாங்கம் உதவ வேண்டிய தேவை உள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக