5 ஜனவரி, 2010

ஜே. வி. பிக்கு 24 மணிநேர காலக்கெடு

சரத் பொன்சேகா எந்தவொரு ஆயுதக் கொள்வனவு, மோசடிகளிலும் சம்பந்தப்படவில்லை என்று ஜே. வி.பி. நிரூபிக்கவும் அல்லது, மோசடி வேட்பாளர் ஒருவருக்கு அக்கட்சி ஆதரவு வழங்கியது என்பதை ஏற்றுக்கொள்ளவும் அரசு 24 மணிநேர அவகாசத்தை வழங்கு வதாக மின்சக்தி அமைச்சர் மஹி ந்தானந்த அளுத்கமகே நேற்று சபையில் அறைகூவல் விடுத்தார்.
25 மில்லியன் ரூபாவுக்கு குறைந்த ஆயுதங்களை கொள்வனவு செய்வது தொடர்பான கேள்விப் பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் சபைக்கு, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி என்ற ரீதியில் சரத் பொன்சேகாவே தலைவராக இருந்தார் என்று கூறிய அமைச்சர், சரத் பொன்சேகாவினால் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான ஆவணம் ஒன்றையும் சபையில் முன்வைத்தார்.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்றக் குழுத் தலைவரான அநுர குமார திஸாநாயக்கவுக்கு அதனை வாசித்து பார்க்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
இதனை வாசிப்பதற்கு உங்களுக்கு 24 மணிநேர கால அவகாசம் வழங்குகிறோம். அதனை வாசித்து பின் நீங்கள் ஆதரிக்கும் வேட்பாளர் முழுமையாக ஊழலை ஆதரிப்பவர் என்றோ அல்லது நீங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பதாக கூறிக்கொள்வதனால் பொன்சேகாவை ஆதரிக்கும் பிரசாரத்திலிருந்து விலகிக்கொள்வதா என்பதை அந்த 24 மணி நேரத்திற்குள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கள்வர் கூட்டம் என்றே நீங்களும் அழைக்கப்படுவீர்கள்.