24 அக்டோபர், 2009

இலங்கை - வியட்நாமிடையே ஐந்து ஒப்பந்தங்கள்

லங்கை- வியட்நாம் நாடுகளுக்கிடை யிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இருநாடுகளுக்குமிடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வியட்நாம் ஜனாதிபதி நுயேன் மின் ட்ரயட் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து மேற்படி ஐந்து உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகியுள்ளன.

இருநாடுகளுக்குமிடையிலான முதலீடு, கலாசார ஒத்துழைப்பு, விவசாய அபிவிருத்தி, கடற்றொழிலுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு குற்றத்தடுப்பு மற்றும் தேடுதல் தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, ஆகிய ஐந்து உடன்படிக்கைகள் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இருநாடுகளுக்குமிடையிலான முதலீட்டுத் துறைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் வியட்நாமின் சார்பில் அந்நாட்டின் முதலீடு மற்றும் திட்டமிடல் அமைச்சர் வோ ஹொங்புக் கும் கைச்சாத்திட்டுள்ளனர்.

இருநாடுகளுக்குமிடையிலான கலாசார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கலாசார அமைச்சரின் சார்பில் வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் அந்நாட்டின் கலாசார, விளையாட்டுத்துறை மற்றும் கலாசார அமைச்சரான நுயேன் டன் தையும் கைச்சாத்திட்டுள்ளனர்.

விவசாயத்துறையை ஊக்குவிக்கும், முன்னேற்றும் வகையில் 2010-2011ம் ஆண்டுக்கான விவசாயத்துறை அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் விவசாய அபிவிருத்தி அமைச்சரின் சார்பில் வெளி நாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் வியட்நாம் விவசாய, கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சருமான வூ வான் டம்மும் கைச்சாத்திட்டுள்ளனர்.

அதேபோன்று வியட்நாம் அரசாங்கம் இலங்கையின் கடற்றொழில் துறைக்கு 2010 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் தொழில் நுட்ப ஒத்துழைப்பினை வழங்குவதற்கான ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இவ் உடன்படிக்கையில் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் அந்நாட்டின் விவசாய, கிராமிய அபிவிருத்தி அமை ச்சின் அதிகாரிகளும் கைச்சாத்திட்டுள் ளனர்.

அதேவேளை, மற்றுமொரு முக்கிய உடன்படிக்கையான குற்றத்தடுப்பு மற்றும் சுற்றி வளைப்பு தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகைகள் சம்பந்தமான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத்தும் வியட்நாம் அரசின் சார்பில் அந்நாட்டின் மக்கள் பாதுகாப்பு அமைச்சின் நிரந்தர பிரதிநிதி ருயேன் கான் ஜோன் ஆகியோரும் கைச்சாத்திட்டுள்ளனர்.

இவ் உடன்படிக்கைகள் இரு நாட்டுத் தலைவர்களினதும் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக