15 நவம்பர், 2009

இலங்கைத் தமிழர்களின் புகலிட கோரிக்கையின் எதிர்காலம் ஐ.நா.வின் கையில்:பிரதமர் கெவின் ரூட்


தமிழர்களின் புகலிட கோரிக்கையின் எதிர்காலம் ஐ.நா.வின் அகதிகளிற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் கையில் உள்ளது என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி வந்த 78 தமிழர்களை அவுஸ்திரேலியக் குழுவினர் தடுத்து நிறுத்தி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும் இந்தோனேஷிய அரசாங்கம் இவர்களை ஏற்கமறுத்துவரும் நிலையில் 78 பேருக்கும் கொள்கை அளவில் புகலிடம் தர அவுஸ்திரேலியா ஒப்புக் கொண்டது.12 வாரங்களுக்குள் 78 பேரையும் குடியேற்றம் செய்யவும் அது முன்வந்தது.

இதைத் தொடர்ந்து அந்தக் கப்பலிலிருந்து 22 தமிழர்கள் நேற்று வெளியேறியுள்ளனர்.ஏனைய 56 பேரும் கப்பலிலேயே உள்ளனர். 22 பேரையும் தான்சுங் பினாங்கில் உள்ள குடியேற்றப் பிரிவு மையத்திற்கு இந்தோனேசியா அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் 78 பேரின் எதிர்காலம் ஐ.நா. அகதிகளிற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் கையில் உள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் ஆசியா பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கெவின் ரூட் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்," அனைத்து அரசியல் புகலிடம் கோரும் தமிழர்களின் கோரிக்கையை மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும், முறைப்படியும் நாங்கள் அணுகுவோம்.

இருப்பினும் தனி நபர்களின் புகலிடக் கோரிக்கை குறித்து முதலில் கவலைப்பட வேண்டியது ஐ.நா. அகதிகளிற்கான உயர்ஸ்தானிகராலயம் தான்.. இரண்டாவது அகதிகளை ஏற்பது தொடர்பாக ஐ.நா. பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள 15 நாடுகளுடையதாகும்.இந்த முறைப்படி இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை நாங்கள் அணுகுவோம்" என்றார்

இடம்பெயர்ந்துள்ள மக்களை பார்வையிட த.தே.கூட்டமைப்புக்கு அனுமதி




பிரதேசத்திலுள்ள இடைத் தங்கல் முகாம்களுக்கும் ,இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள பிரதேசங்களுக்கும் செல்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அனுமதியளித்துள்ள அரசாங்கம் போக்கு வரத்து வசதிகளையும் வழங்க முன்வந்துள்ளது.

இதன் பிரகாரம் நாளை திங்கட்கிழமை வவுனியா ,மன்னார் ,கிளிநொச்சி ,துணுக்காய் ஆகிய இடங்களுக்கு அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதிநிதிகளும் அழைத்துச் செல்லப்படவிருக்கின்றார்கள்.

ஏற்கனவே ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பிலும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பிலும் இடம்பெயர்ந்துள்ள மக்களையும் ,மீளக் குடியமர்ந்த மக்களையும் பார்வையிட ஏற்பாடுகளை செய்து தருமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது.

வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சுமார் 10 பேர் இக்குழுவில் இடம்பெறவிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை காலை 7.00 மணிக்கு இரத்மலானை விமான நிலையத்திலிருந்து விமானப்படை விமானம் மூலம் வவுனியா புறப்பட்டுச் செல்லும் இவர்கள் வவுனியா விமானப்படை தளத்திலிருந்து ஹெலிக்கொப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

முதலில் மன்னார் பகுதிக்கு விஜயம் செய்யும் இவர்கள் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன் துணுக்காய் பகுதிக்கும் விஜயம் செய்வர்.

கிளிநொச்சி பகுதிக்கும் செல்லும் இவர்கள் வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள மெனிக்பாம் நிவாரணக் கிராமங்களுக்கும் செல்லவுள்ளனர். திங்கட்கிழமை காலை முதல் மாலைவரை இப்பகுதிக்கு விஜயம் செய்யும் கூட்டமைப்பினர் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுடனும் உரையாடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இது தொடர்பாக தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக