8 ஏப்ரல், 2011

மாந்திரீகத்தில் உலகக் கோப்பையை கைப்பற்ற ஜனாதிபதி முயன்றமை வேடிக்கை


உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கை அணி பின்னடைவை சந்திக்க அரசியல் தலையீடும், ஊழல் மோசடிகளுமே காரணம். எனவே பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்தார்.

இந்திய கடவுளிடம் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுவது நடக்க கூடியதொன்றா? திறமைக்கு மதிப்பளிக்காது மாந்திரீகத்தில் கோப்பையை கைப்பற்றிக் கொள்ள ஜனாதிபதி முயன்றமை வேடிக்கையானது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மங்கள சமரவீர எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற்று முடிந்த கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் பின்னடைவை சந்தித்தது. இது அனைத்து வாழ் இலங்கையருக்கும் பாரிய கவலையான விடயமாகவே காணப்பட்டது. 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை சுவீகரித்தபின்னர் இலங்கை கிரிக்கெட் அணி மிகவும் திறமையான அணியாகவே காணப்பட்டது.

ஆனால் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு மேலோங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் கிரிக்கெட் சபையில் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். நாமல் ராஜபக்ஷ எம்.பி. நேரடியாகவே தலையிட்டு கிரிக்கெட் சபையை ஆட்டம் காண வைத்துள்ளார்.

அதே போன்று கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளின் போது பெரும் தொகையான நிதிகள் கைமாறுகின்றன. இதற்கு பேராசைப்பட்டு எமது வீரர்களின் திறமைகளை சீரழிக்கின்றனர். மேலும் வீரர்களின் திறமைகள் தொடர்பாக சிந்திக்காமல் மாந்திரீக சிந்தனையுடன் விளையாட வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.

எனவே 2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முகங்கொடுக்க வேண்டும் என்றால் பிழைகளை திருத்தியமைக்க வேண்டும். அரசியல் தலையீட்டை முழு அளவில் இல்லாதொழிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக