4 ஏப்ரல், 2011

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை மாத நடுப் பகுதியில் வெளியாகும்

இறுதிப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலகச் சட்ட மீறல்களுக்குப் பொறுப்புச் சொல்வதற்கான ஆலோசனைகளை வழங்கவென ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இந்த மாதத்தின் நடுப் பகுதியில் பகிரங்க அறிக்கையாக வெளியிடப்படவுள்ளது. அறிக்கையின் பிரதி பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அது பகிரங்கப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பெப்ரவரி மாத இறுதியிலேயே சமர்ப்பிப்பதற்குத் தயாராகி இருந்தது. எனினும் கடைசி நேரத்தில் இலங்கையில் இருந்து சென்ற விசேட குழுவினர் பான் கீ மூனுடனும் நிபுணர் குழுவினருடனும் நேரில் சந்தித்து நடத்திய பேச்சுக்களின் பின்னர் அறிக்கையைக் கையளிக்கும் திகதி பிற்போடப்பட்டது. எனினும் அந்த அறிக்கை இந்த மாத நடுப்பகுதியில் ஐ.நா. பொதுச் செயலரிடம் உறுதியாகக் கையளிக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னர் அந்த அறிக்கை பகிரங்க ஆவணமாக அனைத்துத் தரப்பினரும் பெறுவதற்கு வசதியாக வெளியிடப்படவும் உள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக சுயாதீன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அழுத்தம் உலகம் முழுவதும் வலுத்து வரும் நிலையில் நிபுணர் குழுவின் அறிக்கையும் அதற்கு ஆதரவான வகையிலேயே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக