4 ஏப்ரல், 2011

இளவாலையில் குழு மோதல்: பத்துக்கும் மேற்பட்டோர் காயம்

இளவாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் ஏற்பட்ட சண்டையில் பத்துக்கு மேற்பட்டவாகள் காயங்களுக்கு உள்ளாகியதுடன் பொலிஸ் வாகனம் தாக்கப்பட்டதுடன் மற்றுமொரு தனியார் பஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

இளவாலை யங் ஹென்றீஸ் விளையாட்டுக்கழகம் யாழ் மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடத்திய உதைபந்தாட்டப் போட்டி இளவாலை சென் ஹென்றீஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று 03 ம் திகதி பிற்பகல் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் ஏழாலை மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையே இடம்பெற்ற போட்டியில் விளையாட்டு வீரர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து கற்கள் வீசப்பட்டதுடன் தடிகள் பொல்லுகள் கொண்டும் இரு பகுதியினரும் சண்டையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அமைதியை நிலைநாட்டும் முகமாக அயலில் உள்ள இளவாலைப் பொலிஸார் உடனடியாகக் களத்திற்கு வந்து இரு அணிகளினதும் சண்டையை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

இந் நிலையில் சண்டையில் ஈடபட்டவர்கள் பொலிஸாரின் வாகனத்தின் மீது கற்களை வீசியதுடன் பொலிஸாரையும் தாக்கியுள்ளார்கள். உடனடியாக பாதுகாப்பைப் பலப்படுத்திய பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஐவரை கைது செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக