12 மார்ச், 2011

12.03.2011. வவுனியா வடக்கு நெடுங்கேணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல்



கூட்டம்- வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவுகோரும் வகையில் நேற்றையதினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று இடம்பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் சிவநேசன் பவன், புளொட் மத்தியகுழு உறுப்பினரும், வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், ஆசிரியர்கள், கிராமத் தலைவர்கள், வர்த்தக சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பெருந்திரளான பொதுமக்களும் இதில் பங்கேற்றிருந்தனர். இங்கு உரையாற்றியவர்கள், தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து பெரும்பான்மை வாக்குகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதிசெய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சகலரும் ஓரணியில் திரண்டு வாக்களிக்க வேண்டும்- இரா.சம்பந்தன் அவர்கள் கோரிக்கை- தமிழர் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியதும் நியாயமானதுமான அரசியல் தீர்வு காண்பதன்மூலமே வரலாற்று ரீதியான தங்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தமிழ்பேசும் மக்கள் பாதுகாப்புடனும், கௌரவமாகவும் தங்களின் சட்டபூர்வமான அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார அபிலாசைகளை பூரணமாக பெற்று வாழ்வதை உறுதிப்படுத்த முடியும். இந்த இலட்சியத்தை அடைவதற்கு சகலரும் ஐக்கியப்பட்டு ஆதரவு வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வானது வடக்கு கிழக்கு பகுதியில் வாழும் அனைத்து மக்களுக்கும் நீதி, நியாயமானதாக அமைவதற்கும் நாம் முயற்சி எடுப்போம். இதற்கான உறுதியினை கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் நாம் வழங்குகின்றோம். எனவே மக்களின் இலட்சியத்தை அடைவதற்கு தேவையான நேர்மை மற்றும் பொது அர்ப்பணிப்புடன்கூடிய தார்மீக பலமற்ற எந்த அரசியல் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்க கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஓரணியில் திரண்டு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி தேர்தலை முன்னிட்டு இரா.சம்பந்தன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக