24 பிப்ரவரி, 2011

யாழ்ப்பாணத்திலிருந்து வெங்காயம், மிளகாய், கிழங்கு பெருமளவு வருகை; விலைகள் வீழ்ச்சி


யாழ்ப்பாணத்திலிருந்து பெருமளவு மரக்கறி, வெங்காயம், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் ஆகியன தம்புள்ளை சந்தைக்கு வந்துள்ளதால் அவற்றின் விலை வெகுவாகக் குறைந்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனால் எதிர்க் கட்சி மேற்கொண்ட வீண் பிரசாரத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நிதியமைச்சின் உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அமைச் சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் :

காலநிலை இயற்கை அனர்த்தம் காரணமாக கடந்த சில வாரங்களாக மரக்கறி விலை அதிகரித்திருந்தது. இலங்கையில் மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும் இத்தகைய நிலையே நிலவியது.

இக்காலகட்டங்களில் மரக்கறி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவை யாழ்ப்பாணத்திலிருந்து தம்புள்ளை பொருளாதார வர்த்தக நிலையத்துக்கு வந்துள்ளன. பீட்றூட் கிழங்கு, வெங்காயம் போன்ற வை இலட்சக் கணக்கான கிலோக்கள் தம்புள்ளைச் சந்தைக்கு வந்து சேர்ந்துள்ளன.

இதனால் அண்மைக் காலமாக அதிகரித்திருந்த மரக்கறி விலைகள் தற்போது குறைவடைந்து வருகின்றன. பயங்கரவாதத்தை ஒழித்து அப்பகுதியில் இயல்பு நிலையை தோற்றுவித்ததன் பயன்களாகவே இதனைக் கருதமுடியும்.

ஐக்கிய தேசியக் கட்சி அப்பகுதியைப் பிரிக்க முயற்சித்தது. அவ்வாறு நடந்திருந்தால் இத்தகைய பயன்களை பெற்றிருக்க முடியுமா எனவும் அமைச்சர் சபையில் கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக