2 பிப்ரவரி, 2011

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் அமோக வெற்றியீட்டும் வேட்பு மனுக்கள் சில நிராகரிக்கப்பட்டமை எவ்வித பின்னடைவையும் ஏற்படுத்தாது

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட போதும் அதனால் ஐ.ம.சு.முவுக்கு எதுவித பின்னடைவும் ஏற்படவில்லை. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.ம.சு. முன்னணி பெருவெற்றியீட்டும் என ஐ.ம.சு. முன்னணி தலைவர்கள் நேற்று கொழும்பில் தெரிவித்தனர்.
ஜனாதிபதி, பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளின் அதிகாரமுள்ள கட்சிக்கே கிராமத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் மக்கள் வழங்குவர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஐ.ம.சு. முன்னணி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பு மகாவலி நிலையத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், நிமல்சிறிபால டி சில்வா, டளஸ் அழகப் பெரும, விமல் வீரவங்ச, ஐ.ம.சு. முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த, மாகாண அமைச்சர் உதய கம்மம்பில ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.

அமைச்சர் மைத்திரிபால

அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறியதாவது, ஆளும் கட்சிக்கே உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தையும் மக்கள் வழங்குவர், இதில் ஐயமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைப் பெருவெற்றி பெறச் செய்தனர். அடுத்து நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் ஐ.ம.சு. முன்னணி பாரிய வெற்றியீட்டியது. ஐ.ம.சு. முன்னணி போட்டியிடும் சகல உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் எமக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது உறுதி.

அரசாங்கத்தினதோ மாகாண சபைகளினதோ உதவி இன்றி உள்ளூராட்சி சபைகளினால் இயங்க முடியாது. இந்த நிலையில் உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க மக்கள் தயாராக இல்லை. மக்கள் புத்திசாலித் தனமாகவே முடிவெடுப்பர் என்றார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது,

சில உள்ளூராட்சி சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதன் மூலம் ஐ.ம.சு. முன்னணிக்கு எதுவித பின்னடைவும் ஏற்படவில்லை. ஐ.ம.சு. முன்னணியின் கூடுதலான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட போதும் ஏனைய கட்சிகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் பாடம் கற்று எதிர்காலத்தில் ஒழுங்காக செயற்பட உறுதி பூண்டுள்ளோம்.

எமது கட்சிக்கு அடி மட்ட முதல் பாரிய அடித்தளமுள்ளது.

சில வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதன் மூலம் எமது அரசியல் பலம் குறையவில்லை.

மக்கள் எம்முடனே உள்ளனர். கிராம மட்டத்தில் பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளதால் எமது வேட்பாளர்களும் தைரியமாக கிராமத்திற்கு சென்று வாக்குக் கேட்க முடியும்.

ஆனால் ஐ.தே.க.வுக்கோ ஜே.வி. பி.யிற்கோ கிராமங்களுக்குச் சென்று மக்களைக் கவர எதுவித தலைப்பும் கிடையாது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதிகாரத்துக்கு வரும் சாத்தியம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.

தேர்தல் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுக்கவுள்ளோம். எமது வாக்குப் பலத்தில் சிறு பின்னடைவும் ஏற்படவில்லை என்றார்.

அமைச்சர் விமல் வீரவங்ச

இந்தத் தேர்தல் அரசாங்கத்திற்கே முக்கியமானதாகும். எதிர்க்கட்சிகளுக்கு இது மற்றொரு தோல்வி மட்டுமே. ஐ.தே.க. வின் தோல்வியை சஜித் பிரேமதாஸ முன்கூட்டியே ஏற்றுக் கொண்டு விட்டார். உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் மக்கள் சபைகள் அமைக்கப்பட்டு கிராம அபிவிருத்தி துரிதப்படவுள்ளது. கிராமத்தின் அதிகாரத்தை மக்கள் ஐ.ம.சு. முன்னணிக்கே வழங்குவர்.

அமைச்சர் ரிசாத் பதியுதீன்

அமைச்சர் ரிசாத் பதியுதீன் கூறியதாவது, இந்தத் தேர்தலில் ஐ.ம.சு. முன்னணி பெருவெற்றியீட்டும். ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு. முன்னணி அரசாங்கம் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகிறது. மன்னார் பாலம், சங்குப்பிட்டி பாலம், திருகோணமலை வீதி, ஏ-9 வீதி, ஏ- 32 வீதி என பாரிய அபிவிருத்திகள் இடம்பெற்று வருகின்றன.

ஐ.ம.சு. முன்னணியை வெல்ல வைப்பதன் மூலம் நாட்டில் அபிவி ருத்திப் பணிகள் சிறப்பாக இடம் பெறும்.

இந்தத் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் நடக்காது. 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேச மக்கள் ஐ.ம.சு. முன்னணியை வெற்றிபெற வைப்பதற்கு அணிதிரள வேண்டும். மக்களின் எதிர்காலமும் பிரதேச அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு என்பவற்றிக்காக ஐ.ம.சு. முன்னணியை மக்கள் வெற்றிபெற வைக்க வேண்டும்.

தமிழ், முஸ்லிம் மக்கள் புத்தி சாதுர்யமாக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக