17 ஜூன், 2010

போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுவதை அரசு நிராகரிப்பு


இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மீண்டும் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று (16) இதனை அறிவித்தார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாஷியுடனான சந்திப்புக்குப் பின்னர் வெளிவிவகார அமைச்சில் அவருடன் கூட்டாக நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே பேராசிரியர் பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கூறப்படுவது பற்றி ஜப்பானின் நிலைப்பாடு யாதென்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அகாஷி பதிலளித்ததன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் பீரிஸ் விளக்கினார். அதேநேரம், அரசியல் தீர்வு விடயமாக சிறுபான்மைக் கட்சிகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த் தைகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ச்சியாக இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த ஜப்பானிய விசேட தூதுவர் அகாஷி, இலங்கைக்கு சர்வதேச அமைப்புகள் அழுத்தம் கொடுக்க வேண்டியதில்லையென்றும், தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அதனை ஜப்பான் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக