17 ஜூன், 2010

போர்க்குற்ற விசாரணை குறித்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் : பிரி.அமைச்சர்

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பாக ஐ.நா.சபை பொதுச் செயலருக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தெற்காசிய விவாகாரங்களுக்கான பிரிட்டிஷ் பிரதி அமைச்சர் அலிஸ்டர் பர்ட் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக்குழு விவாதம் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்து, சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் நேரடியாக ஆதரிக்கவில்லை.

விவாதத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய தொழிற்கட்சி உறுப்பினர் சியோபன் மிக் டொனால்ட், சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச நெருக்கடிக்கான குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருந்த விடயங்களையும், செனல் 4 இல் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகள் போன்றவற்றையும் ஆதாரம் காட்டிப் பேசினார்.

போர்க் குற்றங்கள் குறித்த ஒரு சுயாதீன சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டியதன் முதல் கடமை இலங்கை அரசுடையது என்று சர்வதேச சட்டம் கூறுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் ஒரு விசாரணையை இலங்கை மீது திணிக்க முடியாது என்று அமைச்சர் அலஸ்டர் பர்ட் தெரிவித்தார்.

இந்த விவாதத்தில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொழிற்கட்சியைச் சேர்ந்த கீத் வாஸ், இலங்கை அரசாங்கம் யுத்த குற்றங்கள் குறித்த சாட்சியங்களை அழிக்கும் பணியைச் செய்ய ஒரு சீன நிறுவத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஊடக தகவல்கள் மூலம் தான் அறிந்ததாக தெரிவித்தார்.

தென் ஆபிரிக்க அரசின் இன வெறிக் கொள்கையை எதிர்க்கும் விதமாக அந்நாட்டுப் பொருட்களை புறக்கணித்தது போன்று, இலங்கைப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக