2 ஜூன், 2010

மலேஷிவாவில் அகதிகள் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

மலேஷியாவில் கடந்த எட்டு தினங்களாக இலங்கைத் தமிழ் அகதிகள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதம் நேற்று செவ்வாய்க்கிழமை மலேஷிய நேரப்படி 2.00 மணிக்குக் கைவிடப்பட்டது.

மலேஷிய பிரதமர் அலுவலகம் அவர்களது கோரிக்கையைப் பரிசீலிப்பதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்தே அவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி 6 பெண்கள் 8 குழந்தைகள் உட்பட 75 இலங்கையர் தங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாட்டுக்கு புறப்பட்டனர்.

அவர்களின் படகு பழுதடைந்ததால் நடுக்கடலித் தத்தளித்தனர் இந்நிலையில் மலேஷிய படையினர் அவர்களை கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அகதிகள் மலேஷிய பினாங்கு கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே இலங்கை அகதிகள் தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடொன்றுக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர் . இதனை யடுத்து உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்றும் அல்லது அனைவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார்கள் எனவும் சிறை அதிகாரிகளினால் எச்சரிக்கப்பட்டனர்.

இருந்த போதிலும் உண்ணாவிரதிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. இதனையடுத்து மலேஷிய பிரதமர் அலுவலகத்துக்கு தொலைநகல் மூலம் அகதிகளின் நிலை தெளிவுபடுத்தப்பட்டதுடன் மலேஷிய ஆணையாளர் டத்தோ அப்துல் ரகுமானை மாற்று செயலணி அமைப்பின் உறுப்பினரான கலைவாணர் சந்தித்து உரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமரின் அந்தரங்கச் செயலாளரிடமும் அகதிகளான மக்களின் துயர நிலை குறித்து அவர் எடுத்துக் கூறினார். இறுதியில் அகதிகளான மக்களின் உயிர் காக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது, கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக