26 டிசம்பர், 2010

தமிழரை நம்பவைத்து ஏமாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி


சிறுபான்மையின தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளினாலேயே இன்றுவரை எதிர்க்கட்சியில் ஒருசில ஆசனங்களையாவது தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் காலத்தில் தமிழ் மக்களுக்கு பெரும் துரோகத்தை இழைத்தமையை அவரது மகன் சஜித் பிரேமதாச வெளிப்படுத்தியுள்ளார்.

அண்மையில் இணையத் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே தனது தந்தையான பிரேமதாச புலிகளின் மூத்த தலைவர்களான யோகி, மாத்தையா ஆகியோரைப் பயன்படுத்தி அந்த இயக்கத்தைப் பிளவுபடுத்தி அவர்களுக்குள் மோதவிட்டார். இது எனது அப்பாவின் தந்திரம்.

அத்துடன் புலிகளை மேலும் பலவீனப்படுத்தவே எனது அப்பா ஆயுதங்களையும், நிதியுதவிகளையும் அவர்களுக்கு வழங்கினார் எனத் தான் திடமாக நம்புவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களையும் அரவணைக்கும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களின் பேராதரவு தமக்கே உள்ளது எனவும் இன, மத, மொழி பேதமற்ற கட்சி எனவும் மார்பு தட்டிவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் உண்மையான நிலைப்பாடு இதுவாகத்தான் இருந்து வருகிறது.

ஐ. தே. க வின் அடுத்த தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சஜித் பிரேமதாச நாளை அப்பதவி கிடைத்தால் தமிழ் மக்களையும் இவ்வாறுதான் மோதவிடும் அரசியல் நடத்துவார் எனத் தமிழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

1983 ஆம் ஆண்டு கலவரத்திற்குக் காரணமாகவிருந்த ஜே. ஆர்.ஜெயவர்தனவை விட மோசனமானதோர் ஆட்சியையே சஜித் பிரேமதாச நடத்துவார். புலிகளை அழிக்க நினைத்ததில் தப்பில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு புலிகள் மூலமாகத் தீர்வை முன்வைப்பது போன்று

கபடமானதோர் நாடகமாடி ஒரே இனத்திற்குள் மோதலை ஏற்படுத்தி தனது கட்சியை நம்பிய மக்களை ஏமாற்றியமை மன்னிக்க முடியாத குற்றம் எனவும் தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளை பல தடவைகள் பேச்சுக்கு அழைத்தபோதிலும் அவர்கள் வராது அடம்பிடித்தனர். மாவிலாறு போன்ற சம்பவங்களால் புலிகள் தமது பயங்கரவாதத்தைக் கக்கியபோதும்தான் வேறுவழியின்றி, முழு நாட்டு மக்கள் நலன் கருதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புலிகளை இல்லாதொழித்தார். அதன் மூலம், இன்று தமிழ் மக்கள், தம்மை நிம்மதியாக வாழவைத்த ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக