3 டிசம்பர், 2010

லண்டன் உரை இரத்தானதன் எதிரொலி:



ஜயலத் எம்.பிக்கு எதிராக கோஷம்; குழப்பம் சபையில் பதற்றம்; அமளி துமளி
சபை நடவடிக்கை 40 நிமிடம் ஒத்திவைப்பு
லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டதன் எதிரொலியாக நேற்று பாராளுமன்றத்தில் அமளிதுமளி ஏற்பட்டது.

ஆளுந்தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தலைமையிலான ஆளுந் தரப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி முன்வரிசையில் அமர்ந்திருந்த ஜயலத் ஜவர்த்தனவை நோக்கி பாய்ந்து சென் றனர். இதனால் ஏற்பட்ட குழப்ப நிலை யால் பாராளுமன்றம் சுமார் 40 நிமிடங்களு க்கு ஒத்திவைக்கப் பட்டது.

நேற்றுக்காலை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ததீமையில் பாராளுமன்றம் கூடியது. வழமையான கேள்வி நேரத்தின் பின்னர் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை ஆரம்பமானது. ஊடகத்துறை அமைச்சுக்கான விவாதத்தை ஐ. தே. க. எம்.பி. கயந்த கருணாதிலக்க ஆரம்பித்தார்.

இச்சந்தர்ப்பத்தில் ஆளுந் தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்தன ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஜனாதி பதியின் உரை ரத்துச் செய்யப்பட்ட விடயம் தொடர்பா கவே அவர் ஒழுங்குப் பிரச்சினை எழுப் பினார்.

அமைச்சர் தினேஷ் பேசும் போது : லண்டனில் ஜனாதிபதி

மஹிந்த ராஜபக்ஷவினால் நிகழ்த்தப்படவிருந்த உரை பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இது ஜனாதிபதிக்கும் நாட்டிற்கும் ஏற்பட்ட மிகப் பெரிய அகெளரவமாகும். நாட்டில் 30 வருடங்களாக இடம்பெற்ற பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துவிட்டு ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியினால் சுதந்திரமாக நிகழ்த்தப்படவிருந்த உரை ரத்துச் செய்யப்பட்டது. இது சர்வதேச மட்டத்தில் ஊடகங்களின் மூலம் ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. இது எமது ஜனாதிபதிக்கும், நாட்டிற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சதியும் துரோகமும் ஆகும்.

தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான தமிஸழ விடுதலைப் புலிகளும், நேரடியாகவும் மறைமுகமாகவும் அதற்கு ஆதரவு வழங்கும் தீய தேசத் துரோக சக்திகளும் லண்டன் விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தை காரணம் காட்டி, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதியினால் நிகழ்த்தப்படவிருந்த உரை ரத்துச்செய்யப்பட்டது.

இந்தக் கேவலமான நிகழ்ச்சியின் பின்னணியில் இந்த பாராளுமன்றத்தில் அரசியலமைப்பை முற்றாக ஏற்பதாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட ஒரு உறுப்பினர் கலந்துகொண்டுள்ளார்.

அவர்தான் ஐ. தே. க எம்.பி. டொக்டர் ஜயலத் ஜயவர்தன என தினேஷ் குணவர்தன கூறினார்.

இதனைத் தொடர்ந்தே ஜயலத் ஜயவர்தனவை நோக்கி ஆளுந் தரப்பினர் பாய்ந்து சென்று தாக்க முயற்சித்தனர்.

ஜயலத் ஜயவர்தன எம்.பியை இவர்கள் தாக்கி விடாமலிருக்க ஜோன் அமரதுங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சில உறுப்பினர்கள் அவர்களை கட்டிப்பிடித்து தடுத்து நிறுத்தினர். இவர்களில் ஜகத் புஷ்பகுமார, ஏ. எச். எம். அஸ்வர், நிர்மல கொத்தலாவல, கீதாஞ்சன குணவர்தன, லசந்த அழகியவன்ன ஆகியோரும் சபா மண்டபத்துக்கு நடுவே வந்து ஜயலத் ஜயவர்தனவின் முன் ஆசனப் பகுதிக்குச் சென்று கூச்சலிட்டனர். இச்சம்பவம் நடைபெற்ற போது பார்வையாளர் கலரியில் இருந்த பாடசாலை மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிரிவினைவாத துரோகிகளுடன் இணைந்து நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் துரோகமிழைக்கும் துரோகியே சபையை விட்டு வெளியேறு என கூச்சலிட்டனர். எதிர்க்கட்சி தரப்பின் பின் ஆசன வரிசையில் அமர்ந்திருக்கும் ஆளுந்தரப்பு இளம் எம்.பிக்களும் ஜயலத் ஜயவர்தனவை வெளியேறுமாறு கூச்சலிட்டனர்.

ஆளுந்தரப்பு பிரதம கொறடா தினேஷ் குணவர்தனா, ஜனாதிபதியின் உரை ரத்துச் செய்யப்பட்ட விடயம் தொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றை சபையில் வாசித்த பின்னரேயே ஜயலத் ஜயவர்தனாவை துரோகி என்றும் வெளியேறுமாறும் தெரிவித்தனர்.

இதனையடுத்தே சபையில் அமளிதுமளிகள் ஏற்பட்டன. எனினும், ஜயலத் ஜயவர்தன எம்.பி. ‘குறிப்பிட்ட தினம் நான் லண்டனில் இருக்கவில்லை’ இத்தாலியில் மிலானோ நகரில் இருந்தேன். இதோ எனது கடவுச்சீட்டு இருக்கிறது. வேண்டுமானால் பாருங்கள் என கூறினார். சபைக்குள் இருந்த கூச்சலுக்கு மத்தியில் ஜயலத் ஜயவர்தனாவின் குரல் ஒலிக்கவில்லை. அவரது விளக்கத்தை எவரும் செவி மடுக்கவும் இல்லை.

ஆனால், சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஆளுந்தரப்பு அமைச்சர்கள், எம்.பிக்கள் அமைதியடையுமாறும் ஆசனங்களில் அமருமாறும் பலமுறை கூறினார். அதனையும் எவரும் காதில் போட்டுக் கொண்டதாக தெரியவில்லை. தொடர்ந்தும் ஜயலத் ஜயவர்தனாவை வெளியேறுமாறு கூச்சலிட்டனர்.

இந்த பிரச்சினையை சமரசமாக தீர்ப்பதற்காக சஜித் பிரேமதாஸ, தயாசிறி ஜயசேக்கர எம்.பிக்கள் ஆளுந்தரப்பினருடன் சபா மண்டப நடுவில் நின்றவாறே பேசினர். அதற்கும் ஆளுந்தரப்பினர் இசையவில்லை. கூச்சல் குழப்பம் தொடர்ந்தும் நடைபெற்றதால் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சபையை 10 நிமிடம் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

நேற்றுக்காலை 10.20க்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.

ஜயலத் ஜயவர்தனாவிடமிருந்த கடவுச்சீட்டை புத்திக பத்திரன, சஜித் பிரேமதாஸ ஆகியோர் வாங்கி பரிசீலித்தனர்.

சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் தரப்பினருடன் சமரசம் பேசினர். எனினும் ஏ. எச். எம். அஸ்வர், மஹிந்தானந்த அழுத்கமகே, ஜகத் புஷ்பகுமார, தினேஷ் குணவர்தன, நிர்மல கொத்தலாவல, அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட பலர் ஜயலத் ஜயவர்தனா வெறியேறியே ஆகவேண்டும் எனத் தெரிவித்தனர்.

ஜோன் அமரதுங்க, தயாசிறி ஜயசேக்கர, புத்திக்க பத்திரன, சஜித் பிரேமதாஸ ஆகியோர் ஜயலத் ஜயவர்தனாவை வெளியே அழைத்துச சென்றனர்.

சுமார் 40 நிமிட அமைதிக்குப் பின்னர் மீண்டும் பாராளுமன்றம் ஆரம்பமானது.

இதனைத் தொடர்ந்து நேற்றுக்காலை மக்கள் தொடர்பாடல், தகவல், தொலை தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல், தபால் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு விவாதம் ஆரம்பமானது. ஆளுந்தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிக்கள் சபைக்குள் வந்தனர். எனினும் ஜயலத் ஜயவர்தனா மட்டும் சபைக்குள் வரவில்லை. அமைதியான முறையில் விவாதங்கள் ஆரம்பமாகின.

சபைக்குள் அமளிதுமளி நடைபெறும்போது பார்வையாளர் கலரியில் பாடசாலை மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும் அச் சந்தர்ப்பத்தில் வெளியே அனுப்பப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக