24 டிசம்பர், 2010

தனியார் துறை வேலை நாட்களை 5ஆக குறைப்பதற்கு அரசு திட்டம்

தனியார் துறையின் வேலை நாட்களை 5ஆக வரையறுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ள தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் காமினி லொக்குகே, இது குறித்து தனியார் துறை மற்றும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் அரசாங்கத்தின் திட்டத்தின்படி 2011ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி (சர்வதேச தொழிலாளர் தினத்தில்) முதல் கிழமையில் 5 நாள் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

அமைச்சர் லொக்குகே மேலும் கூறுகையில், தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களின் வேலை நாட்களை திங்கள் முதல் வெள்ளி வரையான 5 நாட்களுக்குள் வரையறுப்பது தொடர்பில் எமது அமைச்சு முன்வைத்த ஆலோசனை தொடர்பிலேயே தற்போது தனியார் துறையுடன் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

தொழில் வழங்குநர்கள் மற்றும் தொழில் அமைச்சுக்கிடையிலான இந்த பேச்சுக்கள் வெற்றியளிக்கும் பட்சத்தில் நாடு முழுவதிலுமுள்ள 80 இலட்சம் தனியார் ஊழியர்கள் வாரத்தில் இரண்டு விடுமுறை தினங்களைப் பெற்றுக் கொள்வர்.

இது தனியார்துறை ஊழியர்களுக்கு நன்மை பயப்பதாக அமையுமே தவிர பாதகங்கள் எதுவும் கிடையாது என்றும் அமைச்சர் சொன்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக