26 நவம்பர், 2010

இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா வருகை கூட்டு ஆணைக்குழு அமர்விலும் பங்கேற்பார்

இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வு இன்று வெள்ளிக்கிழமை வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கூட்டணைக்குழுவின் அமர்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு ஆணைக்குழுவின் அமர்வில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட எஸ், எம். கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமர் டி.எம். ஜயரட்ண ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மேலும் அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகங்களையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் திறந்து வைக்கவுள்ளக்ஷிர். நாளை யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராஜதந்திர பிரதிநிதி அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் பங்கேற்கும் கிருஷ்ணா தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அங்கு சந்திக்கவுள்ளார்.

50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய வீட்டுத்திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ள எஸ்.எம். கிருஷ்ணா மதவாச்சியில் வடக்கு ரயில்வே வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என்று வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் உயர்மட்டத்தினருடனான சந்திப்புக்களின்போது வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக