17 நவம்பர், 2010

சபரிமலை செல்லும் பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் அனுஷ்டிப்பு இன்று ஆரம்பம்

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமியை தரிசிக்கின்றனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பு இன்றிலிருந்து ஆரம்பமாகிறது. இதனையொட்டி அலுத்மாவத்தையில் உள்ள ஸ்ரீ நாகராஜ பெருமான் ஆலயத்தில் விஷேட நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமியை தரிசிக்கின்றனர். அவர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் பக்தி, வைராக்கியத்துடன் விரதம் இருந்து பின்பு யாத்திரை செய்து ஐயப்ப சுவாமியை தரிசித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று ஐயப்ப சுவாமியை தரிசித்து விரதம் இருக்கும் பக்தர்கள் மாலை அணிந்து தமது விரதத்தை ஆரம்பித்தனர்.

நம் நாட்டிலும் ஸ்ரீ ஐயப்ப சுவாமியை தரிசிக்கச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆயிரக்கணக்கான இளைஞர்களும் ஆன்மிகத்தில் ஈடுபட்டு, மாலை அணிந்து, மனதை ஒருநிலைப்படுத்தி ஆன்மிகத்தில் தொண்டாற்றி வருவது ஆன்மிகத்தின் மகிமைக்கு சான்றாக இன்று பல இளஞர்கள் மாலை அணிவதை காணக்கூடியதாக இருந்தது.

மேலும் முதல் முறையாக மாலை போட்டு சபரிமலை யாத்திரை செல்லும் கன்னி சுவாமி மார்கள் முக்கியமாக இன்று மாலை அணிந்து தனது 41 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பை ஆரம்பித்தனர். சபரிமலை செல்லும் பெண்கள் பக்தர்கள் ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பர். இது தூய்மையான விரதமாகும். கார்த்திகை முதலாம் திகதி குரு சுவாமியின் துணையோடு துளசிமாலை அணிந்துகொள்ள வேண்டும்.

மேலும் இவர்கள் கோயில்களில் அர்ச்சனை வழிபாடு செய்து கோயிலில் வைத்து குருக்கள் மூலமாகவும் மாலை அணிந்துகொள்ளலாம். மாலை அணிந்த பின் சுவாமி என்ற பெயராலேயே அந்த பக்தர் அழைக்கப்படுகின்றார். அந்த புனிதமான பெயருக்கு உடையவராகி விட்டால் அதற்குரிய தூய்மையை நேர்மையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

தீய எண்ணங்களையும் பழக்கங்களையும் முழுமையாக கைவிட வேண்டும். காலை, மாலையில் நீராடி விரதம் அனுஷ்டித்து, கோயில் பஜனைகளிலும் கூட்டுப்பிரார்த்தனைகளிலும் பங்கெடுத்து கொள்ளவேண்டும். பக்தர்கள் சாந்தம் வைராக்கியம் தீரம், தியாகம் ஆகிய குணங்களை உடையவர்களாக இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பிரம்மச்சரிய விரதத்தை திடமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

விரதங்களில் இந்த பிரம்மச்சரிய விரதம் தலையானதாகும். காலில் காலணி அணியக் கூடாது. கறுப்பு, நீலம், காவி வேட்டி, சட்டையும் மேல் துண்டும் அணிய வேண்டும். இந்த விரத உடையின் கருத்து யாதெனில் குருடன் கையில் இருக்கும் விளக்கு போன்றதாகும்.

ஆம், குருடனுக்கு விளக்கினால் பயனில்லைதான். அந்த விளக்கின் உதவியினால் வேறு மனிதர்கள் பக்தர்கள் மீது மோதாமல் தடுக்க இயலுமே. அசுத்தங்கள் பக்தர்களை அணுகாமல் இருக்கும்.

விரதங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமாக முழுமனிதனாகப் பக்தர்கள் தங்களைப் பூரணமாகவே புரிந்துகொள்ளவும் அதன்படி நல்ல மனிதர்களாக வாழவும் தெரிந்து கொள்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக