16 நவம்பர், 2010

தெளிவுபடுத்தாவிடினும் நகரப்பதிப்பில் அந்த செய்தியை நான் பிரசுரித்திருப்பேன்: பிரட்ரிகா

சண்டே லீடர் பத்திரிகையில் நகரப் பதிப்பு, பிந்திய நகரப்பதிப்பு என இரண்டு பதிப்புகள் இருக்கின்றன. செய்தியை தெளிவுபடுத்தினாலும் தெளிவுபடுத்தாவிடினும் நகரப்பதிப்பில் அந்த செய்தியை நான் பிரசுரித்திருப்பேன் என "சண்டே லீடர்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸ் நேற்று திங்கட்கிழமை சாட்சியமளித்தார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட்பார் முறையில் நடைபெற்று வருகின்ற வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரட்ரிகா ஜான்ஸிடம் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த நவரத்ன பண்டார நேற்று திங்கட்கிழமையும் மீள் விசாரணை செய்தார்.

இதன்போது நேற்று சாட்சியமளிப்பதற்கு மன்றுக்கு வருகைதந்திருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் லால் விக்ரமதுங்க ஆகியோர் மன்றுக்கு வெளியே அனுப்பப்பட்டனர்.

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெறும் இந்த வழக்கின் மீள் விசாரணையின் போது பிரட்ரிகா ஜான்ஸ் செய்தியை தெளிவுபடுத்தினாலும் தெளிவுபடுத்தாவிடினும் நகரப்பதிப்பில் அந்த செய்தியை நான் பிரசுரித்திருப்பேன் என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக