21 அக்டோபர், 2010

ராமேஸ்வரத்தில் இலங்கைப் படகு : மர்ம நபர்கள் குறித்து விசாரணை

ராமேஸ்வரம் வடகாடு கடல் பகுதியில் இலங்கை படகில் சென்றிறங்கிய, மர்ம நபர்கள் குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் இலங்கை படகுகள் கரை ஒதுங்குவதும், படகில் வந்தவர்கள் தலைமறைவாவதும் வழக்கமாக உள்ளது.

கடந்த காலங்களில் தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், சேரான்கோட்டை, வடகாடு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கை படகுகளை, கடற்படை, சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸா ர் கைப்பற்றினாலும், படகில் வந்தவர்கள் மட்டும் அகப்படுவதில்லை.

நேற்று முன்தினம் நள்ளிரவில், வடகாடு கடற்கரை பகுதியில், இலங்கை மன்னாரை சேர்ந்த பைபர் கிளாஸ் படகு ஒன்று கரை ஒதுங்கியது. 22 அடி நீளம் கொண்ட படகில் 15 குதிரை சக்தி கொண்ட சுசிகி இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தது.

படகில் வந்தவர்கள் எங்கே சென்றார்கள் எனத் தெரியவில்லை. இலங்கை மன்னார் மாவட்ட மீன்பிடி பதிவு எண் இருந்த போதும், படகில் எவரும் இருக்கவில்லை. படகில் வந்தவர்கள் மீனவர்களாக இருந்தால், தாமாகவே பொலிஸ் ஸ்டேஷன் சென்றிருப்பார்கள்.

படகில் வந்து தலைமறைவானவர்கள் இலங்கையைச் சேர்ந்த கடத்தல் நபர்களா, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை.

இதனிடையே, நேற்று முன்தினம் தனுஷ்கோடி கடல் பகுதியில், இலங்கை படகில் தனியாக ஒருவர் பயணம் செய்து வந்ததை, ஹெலிகாப்டரில் ரோந்து சென்ற கடலோர காவல் படையினர் பார்த்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து புலனாய்வு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக