21 அக்டோபர், 2010

தமிழ்நாட்டில் அமைச்சர் டக்ளஸ் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு



1986ஆம் ஆண்டில் சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான வழக்கு நாளை வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை சென்னை 4ஆவது மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைக் கைது செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமை கழகம் சென்னை உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சென்னை 4ஆவது மேல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரஞ்சோதி அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையை நீதிபதி அக்பர்அலி வாசித்தார்.

அதில் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கில் கடந்த 1994ஆம் ஆண்டு தேடப்படும் குற்றவாளி என அறிவித்து விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது உண்மைதான் என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு டக்ளஸ் சார்பில் ஆஜரான வக்கீல் வஜ்ரவேலு எதிர்ப்பு தெரிவித்து, விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்துச் செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிமன்ற விசாரணை நாளைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. நாளையதினம் அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக