9 அக்டோபர், 2010

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. ரவி கருணாநாயக்கவின் தனிநபர் பிரேரணை நேற்று சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட போதிலும் கோரமில்லாததால் பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது. சபை அமர்வின் வழமையான தொடக்க நிகழ்வை தொடர்ந்து எம்.பி ரவி கருணாநாயக்க தமது தனிநபர் பிரேரணை மீது உரையாற்றத் தொடங்கினார்.

இச்சமயம் ஐ.ம.சு. முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி ரவி கருணாநாயக்க எம்.பி. ஏற்கனவே இப்படியான ஒரு பிரேரணையை முன்வைத்திருக்கின்றார். ஆனால் இந்நாட்டின் அரசியல் யாப்பின்படி ஜனாதிபதியின் அதிகாரங்கள், பதவிகள் குறித்து விவாதிக்க முடியாது. அதற்கு பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளிலும் இடமில்லை என்றார்.

சபாநாயகர்:- எம்.பி. ரவி கருணாநாயக்க முன்பு வைத்திருந்த தனிநபர் பிரேரணையில் சில திருத்தங்கள் செய்த பின்னரே விவாதத்திற்கு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதன் பின்னர் இப்பிரேரணையை வழி மொழிந்து எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். இச்சமயம் அவர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து சிறப்புரிமை பிரச்சினை எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சபையில் உரையாற்றினார். இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் டி.எம். ஜயரட்ணவும் சபையில் உரையாற்றினார்.

இவ்வாறு சரத் பொன்சேகா விவகாரம் தொடர்பாக ஆளும் கட்சி எதிர்க் கட்சி எம்.பிக்கள் சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கு அப்பால் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் பிரதியமைச்சர் விஜித் விஜய முனி சொய்ஸா சபையில் கோரமில்லை என்று சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அச்சமயம் ஐ.ம.சு.மு.யின் காலி மாவட்ட எம்.பி. சந்திம வீரக்கொடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது பிற்பகல் நேரம் 2.40 மணியாகும்.

இதனைத் தொடர்ந்து சாபாநாயகரின் பணிப்பின் பேரில் கோரம் மணி ஒலிக்கப்பட்டது.

சரியாக பிற்பகல் 2.45 மணியளவில் சபாநாயகர் சபையில் 18 உறுப்பினர்களே அமர்ந்திருப்பதால் சபை நடவடிக்கையைக் கொண்டு செல்லுவதற்கு போதிய கோரமில்லை எனக்குறிப்பிட்டு சபையை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையும் ஒத்திவைத்தார்.

ரவி கருணாநாயக்க எம்.பியின் ஜனாதிபதி, பிரதமர் பதவி வகிப்போர் அமைச்சரவைப் பதவிகளை வகிப்பது தொடர்பான தனிநபர் பிரேரணையே நேற்று சபையில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக