20 அக்டோபர், 2010

உள்ளூராட்சி திருத்தச் சட்டம்; சிறுபான்மையோருக்கு உரிமை தேவை :

உள்ளூராட்சி மன்ற திருத்தச்சட்டத்தின் ஊடாக சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமைகள் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

மத்திய மாகாணசபையில் உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

"உள்ளூராட்சி திருத்தச்சட்ட மூலத்தில் சிறுபான்மை மக்கள் நலன் தொடர்பாக குறிப்பிட்டுள்ள விடயங்கள் நடைமுறையில் அமுல்படுத்தப்பட வேண்டும். அடிமட்ட மக்களின் பணிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊடாகவே நிறைவேற்றப்படுகின்றன.

அந்த வகையில் சகல இனமக்களும் நன்மை பெறும் வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படவேண்டும்.

இந்நிலையில் கடந்த காலங்களில் சிறுபான்மை மக்கள் தொடர்பாக வழங்கப்பட்ட சில வாக்குறுதிகள் நடைமுறையில் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்களே அதிகமாகவுள்ளன.

குறிப்பாக தமிழ் மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்மொழி அமுலாக்கம் உரிய முறையில் அமுல்படுத்தப்படாத காரணத்தினால் தமிழ் பேசும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலைமை உள்ளூராட்சி திருத்தச்சட்டத்தின் ஊடாக சிறுபான்மை மக்களுக்கு ஏற்படக்கூடாது" என இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணித் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக