23 அக்டோபர், 2010

நிவாரண கிராமங்களின் சிறந்த பராமரிப்பு துரித மீள் குடியேற்றப் பணிகள்

அரசின் செயற்பாடுகளுக்கு பொதுநலவாய பிரதிநிதிகள் பாராட்டு

மோதல்கள் காரணமாக லட்சக் கணக்காக இடம்பெயர்ந்த மக்களை ஒரே மாவட்டத்தில் முகாம்களில் சகல வசதிகளுடனும் தங்க வைத்ததுடன் மட்டுமல்லாமல் படிப்படியாக அவர்களை மீளக் குடியமர்த்துவதற்கும் இலங்கை அரசு மேற்கொண்ட பணியை பொது நலவாய பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.

உலக நாடுகளில் எங்கும் இல்லாதவாறு மூன்றாம் உலக நாடான இலங்கை ஒரு சிரமமான பணியை மிகச் சிறப்பாக செய்து முடித்துக் கொண்டிருக்கிறது என பொதுநலவாய பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

அத்துடன் மீளக்குடியமரும் மக்களுக்கு பொதுநலவாய நாடுகளின் உதவி அவசியம் என்பது பற்றியும் அரச அதிபர்

திருமதி சார்ள்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு சாதகமான பதிலை தமது அரசுகளுடன் கலந்து பேசிய பின்னர் அறிவிப்பதாகவும் பொதுநலவாய பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள பொதுநலவாய பிரதிநிதிகள் குழுவினர் செட்டிக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த போதே இலங்கை அரசின் பணி தொடர்பாக தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

செட்டிக்குளம், மனிக்பாம் முகாம்களுக்கு விஜயம் செய்த பொதுநலவாய பிரதிநிதிகளுக்கு அரச அதிகாரிகள் படைத்தரப்பினர் மக்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள், நிவாரணங்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக