15 ஆகஸ்ட், 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம் முதலமைச்சர் தலைமையில் மட்டக்களப்பில் கூடி ஆராய்வு உடனடி பிரச்சினைகளுக்கு அரசுடன் பேசி தீர்வு காண முடிவு


தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய உடனடித் தேவைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது என தமிழ்க் கட்சிகளின் அரங்கம் நேற்று முடிவு செய்தது.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அரங்கத்தில் இணைந்து கொள்வதற்கு இன்னமும் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்பதுடன், எதிர்காலத்தில் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளையும் அரங்கத்தில் இணைத்துக்கொள்வது பற்றி கவனத்தில் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தமிழ் கட்சிகளின் அரங்கம் நேற்று 5வது தடவையாக மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் கூடியது.

இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டதுடன், மிக முக்கியமான 12 விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்வதென முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக கடந்த தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் எடுக்கப்பட்ட ஒருமித்த தீர்மானத்திற்கு அமைய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அவர்கள் உத்தியோகபூர்வமான முறையில் இதுவரை பதிலளிக்காமையினை இட்டு அரங்கம் தனது கவலையை வெளிப்படுத்தியது.

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய உடனடித் தேவைகள் குறித்து அதிக கவனம் செலுத்தி ஆராயப்பட்டது. அவை,

1. அர்த்தமுள்ள மீள்குடியேற்றம்.

2. உட்கட்டமைப்புடன் கூடிய மீள் கட்டுமானம்.

3. உயர் பாதுகாப்பு வலயங்கள், மீள் குடியேற்றங்கள்.

4. மக்களின் வாழ்விடங்களில் அமைக்கப்பட்டு வரும் இராணுவ குடியேற்றங்கள்,

5. முழுமையான சிவில் நிருவாகத்தினை ஏற்படுத்துதல்.

6. ஆயுதப் போராட்டத்தினால் உடமைகளை, உறவுகளை, அங்கங்களை இழந்த மக்களுக்கு நட்டஈடுகளைப் பெற்றுக்கொடுத்தல்.

7. வடகிழக்கு உட்பட தமிழ் பேசும் பகுதிகளில் இனப் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்தல்.

8. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை தளர்த்துதல்.

9. மீள் குடியேற்றத்தினை வெளிப்படையாகச் செய்வதுடன், அதை மக்கள் பிரதிநிதிகள், சர்வதேச, உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ளல்.

10. இனப் பிரச்சினைத் தீர்வுக்கு மாகாண சபைகளுக்கென பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்ற அரசியல் அமைப்பில் உள்ள 13வது அரசியல் அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துதல் ஆரோக்கியமான முன் முயற்சியாக அமையும்.

11. அடுத்து வரும் கட்டங்களில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் முஸ்லிம், மலையக கட்சிகளை இணைப்பது குறித்து ஆராயப்படும்.

12. தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகள், இறுதி யுத்த நடவடிக்கையின் போது சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளின் விபரங்களை வெளிப்படுத்துவதுடன், அவர்களின் விடுதலைக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக