28 ஜூன், 2010

நளினி புழல் சிறைக்கு மாற்றம்





நளினி
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 19 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருந்து வந்த நளினி இப்போது சென்னையை அடுத்த புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

உணவில் விஷத்தைக் கலந்து தன்னைக் கொல்ல முயற்சி நடப்பதாகவும், தன்னை சிறை அலுவலர்கள் பல வழிகளிலும் துன்புறுத்துவதாகவும் புகார் கூறி தன்னை வேலூரிலிருந்து புழல் மத்திய சிறைக்கு மாற்றுமாறு நளினி வேண்டிக்கொண்டிருந்தார்.

அவரது புகார்கள் குறித்து விசாரிக்கவென அமைக்கப்பட்ட குழு அண்மையில்தான் தனது பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பித்திருந்தது.

சில தினங்களுக்கு முன் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி வேலூர் சிறையில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இருப்பதாகவும், எனவே புழலுக்கு மாற்றம் தேவையில்லை என்று நளினி கருதுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திங்களன்று புழலுக்கு நளினி மாற்றப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கேள்வி
நாங்கள் கோரி வந்தபோது மாற்றாமல் இப்போது மாற்ற முன்வருவானேன்?

நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி

"இப்போது புழலுக்கு மாற்றியிருப்பதால் சில வசதிகள் உள்ளன என்றாலும், வேலூரில் இருந்தபோது அதே சிறையில் இருந்த தனது கணவர் முருகனை நளினியால் அடிக்கடி சந்திக்க முடிந்தது, இனி அத்தகைய சந்திப்புகள் நிகழ்வது கடினமாகும்" என புகழேந்தி குறிப்பிட்டார்.

19 ஆண்டுகளை நளினி சிறையில் கழித்துவிட்ட நிலையிலும் நாட்டின் பாதுகாப்பு காரணம் கருதி அவரை விடுதலை செய்யக்கூடாது என்ற சிறை ஆலோசனைக் குழுவின் முடிவினை எதிர்த்து நளினி தொடுத்திருக்கும் ஒரு வழக்கு வரும் வாரங்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்றும் புகழேந்தி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக