29 மே, 2010

இலங்கை ஆணைக்குழுவின் செயற்பாட்டில் ஹிலாரி கிளிண்டன் நம்பிக்கை


இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பிலான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உறுதிமொழிகளை நிறைவேற்றுமென அமெரிக்க இராஜாங்கச்செயலர் கிலாரி கிளிண்டன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். குறித்த ஆணைக்குழு யுத்தக்குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணைகளை நடத்தி தண்டனை வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கை மக்களின் விருப்பங்களையும் அபிலாசைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் அமையவேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ_டன் நேற்றையதினம் நடைபெற்ற சந்திப்பின் பின்னரான ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவற்றைத் தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தகால யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் இலங்கை மக்களே. இலங்கை அரசு யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நிச்சயமாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமென உள்நாட்டு மனித உரிமைக் குழுக்கள் வலியுறுத்துகின்றன. இலங்கையில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவிடம் நம்பிக்கை வைக்க முடியும். இதன்மூலம் இலங்கையின் நிரந்தர சமாதானத்தை நிலைநாட்ட முடியும். இந்தக்குழு சுயாதீனமாகவும், நீதியாகவும் தமது கடமைகளை நிறைவேற்றி வருகின்றது. இதற்கு அமெரிக்கா பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என்றும் ஹிலாரி கிளிண்டன் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக