25 டிசம்பர், 2009


இறங்கும்போது இரு துண்டாக உடைந்தது அமெரிக்க விமானம்



வாஷிங்டன், ​​ டிச.23:​ அமெரிக்காவில் இருந்து 154 பேருடன் வந்த விமானம்,​​ ஜமைக்கா நாட்டு விமான நிலையத்தில் இறங்கி ஓடுகையில் இரு துண்டுகளாய் உடைந்தன.

​ எனினும் இந்த பெரிய விபத்தில் இருந்து 154 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.​ ஆனால் 40 பயணிகள் காயமடைந்தனர்.

​ அமெரிக்காவுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் 148 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் மியாமியில் இருந்து ஜமைக்காவுக்கு வந்தது.​ ​

இந்நிலையில் கிங்ஸ்டோன் விமான நிலையத்தில் இறங்கி ஓடுபாதையில் வேகமாக ஓட ஆரம்பித்த சற்று நேரத்தில் விமானம் இரு துண்டுகளாக உடைந்தன.​ இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அலறினர்.​ என்ன நடக்கிறதென்றே தெரியாமல் திகைத்துப் போயினர்.

​ இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கிங்ஸ்டோன் விமான நிலைய அதிகாரிகளும்,​​ பிற நாடுகளுக்கு செல்லக் காத்திருந்த பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

​ தகவல் அறிந்ததும் விமான நிலைய பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து விமானத்துக்குள் நிலைகுலைந்து கிடந்த அனைவரையும் மீட்டனர்.​ காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

​ பயணிகள் யாரும் பலமாகக் காயமடைந்தனரா,​​ அவர்களது நிலைமை ஆகியவை குறித்து உடனடியாக அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் இல்லை.

காரணம் தெரியவில்லை:​ இந்த விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து சரிவரத் தெரியவில்லை.​ விபத்துக்கான காரணத்தை அறிவதற்கு ​ தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது.​ விமான விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் சரிவரத் தெரியாத நிலையில் அதுகுறித்து எவ்விதக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்று அமெரிக்க விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக