30 நவம்பர், 2009

வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் பிரசார வேலைகள் ஆரம்பம்


ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதன் மூலம் ஆதரவு தேடுகின்ற பிரசார வேலைகளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வவுனியாவில் ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து, அந்தக் கட்சியின் வன்னிப் பிரதேச அமைப்பாளர் பி.சுமதிபாலா தலைமையில் தேர்தல் பிரசாரத்திற்கான வைபவம் நடைபெற்றது.

இதில் கட்சியின் பிரதேச தலைவர்கள், முக்கியஸ்தர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவினத்தையும் சேர்ந்த பலதரப்பட்டோரும் கலந்துகொண்டனர்.

"வட பிரதேசத்திற்கே வசந்தம். நாட்டுக்கே விடுதலை"
"எமது அரசனுக்கும் இராணுவ வீரர்களுக்கும் வடபிரதேசத்தின் மக்களின் கௌரவம்"
போன்ற தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்தைத் தாங்கிய கட்அவுட் கட்டப்பட்ட ஊர்தி முன்செல்ல பி.சுமதிபாலா தலைமையில் கட்சியினரும், ஆதரவாளர்களும் பேரணியாக வவுனியா மன்னார் வீதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.

இந்த பிரசாரப் பணிகளின் ஆரம்ப வைபவத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னிப்பிரதேச அமைப்பாளர் பி.சுமதிபால உரையாற்றுகையில்,

"வடக்கில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்திய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி வேலைகளை வடக்கில் முன்னெடுத்திருக்கின்றார்.

வீதிகள் அமைக்கப்படுகின்றன. பாலங்கள் கட்டப்படுகின்றன. மின்சாரமில்லாத இடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றது. பாழடைந்து கிடந்த நீர்ப்பாசனக் குளங்கள் புனரமைக்கப்படுகின்றன. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இவற்றிற்கெல்லாம் காரண கர்த்தாவாகிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே அடுத்த ஜனாதிபதி என்பதை இங்குள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் முடிவாகத் தீர்மானித்து விட்டார்கள். இந்தத் தேர்தலில் அமோக வெற்றி அவருக்கே கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது.

அவருடைய வெற்றியை உறுதி செய்வதற்காகவே இந்தப் பிரசார வேலைத்திட்டத்தை நாங்கள் இன்று ஆரம்பித்திருக்கின்றோம்" எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக