30 நவம்பர், 2009

ஜனாதிபதி தேர்தலில் சம்பந்தன் போட்டி?


எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியிடக் கூடுமென பிரபல ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனநயாக மக்கள் முன்னணியுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சியின் இறுதித் தீர்மானம் இன்னும் ஒரு வார காலத்தில் அறிவிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.

மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து தீர்மானம் எடுக்கப்படும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளர் தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்னும் ஒரு சில தினங்களில் ஜனாதிபதித் தேர்தலில் தமது தீர்மானத்தை அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கத்திடம் கேட்ட போது, ஜனாதிபதித் தேர்தலில் இரா. சம்பந்தன் போட்டியிடுவது குறித்த தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக