3 அக்டோபர், 2009


தீவிரவாதிகளை இல்லாதொழித்து அவர்களின் ஆயுதங்களைக் கண்காட்சிப்படுத்தும் ஒரே இராணுவம் இலங்கை இராணுவமென ஜனாதிபதி தெரிவிப்பு-
இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு கண்டித்து பிரிட்டிஷ் ஆளும்கட்சி தீர்மானம் நிறைவேற்றியது-

இலங்கையில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டிக்கும் தீர்மானமொன்றினை பிரிட்டிஷ் ஆளும் தொழிற்கட்சி வருடாந்த மாநாட்டில் நிறைவேற்றியுள்ளது. உள்நாட்டுப் யுத்தத்தின் பின்னர் இலங்கை நிலைவரம் குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தொழிற்கட்சியைச் சேர்ந்தவரான வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் தனதுரையில், உள்நாட்டு யுத்தம் உயிர்களையம் சுதந்திரத்தையும் பலிகொண்டுள்ள இலங்கை போன்ற ஜனநாயக நாடுகளின் அரசுகளுக்கு தனது அனைத்துப் பிரஜைகளினதும், பொது, சமூக, அரசியல் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடப்பாடுள்ளது என்று தெரிவித்துள்ளார். இம்மாநாட்டில் இலங்கையில் 03லட்சம் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மனிதாபிமானமற்ற செயல் என்று தெரிவித்து அதனைக் கண்டிக்கும் தீர்மானம் விவாதத்திற்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளை இல்லாதொழித்து அவர்களின் ஆயுதங்களைக் கண்காட்சிப்படுத்தும் ஒரே இராணுவம் இலங்கை இராணுவமாகும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராணுவத்தின் 60வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஏனைய நாட்டு இராணுவத்தினர் தமது ஆயுதங்களைக் கண்காட்சிப்படுத்துவதற்காகவே கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதாகவும், தமது இராணுவத்தினர் தீவிரவாதிகளின் ஆயுதங்களைக் கண்காட்சிப் படுத்தவதற்காகவே இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய நாடுகள் தமது நாட்டு இராணுவத்தினரைப் பின்பற்றுகின்றன என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக