15 ஜூன், 2011

பின்லேடன் குறித்து சிஐஏக்கு தகவல் அளித்தவர்கள் கைது

அல் காய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்னரே அவரைப்பற்றி சிஐஏக்கு தகவல் அளித்தவர்களை பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ கைது செய்தது தெரியவந்துள்ளது.

பின்லேடன் தங்கி இருந்த மாளிகையை கண்காணிப்பதற்காக அமெரிக்க உளவுத்துறை சிஐஏ வாடகைக்கு எடுத்திருந்த வீட்டின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவராவார்.

பின்லேடனை அமெரிக்கா கொல்வதற்கு முன்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் பாகிஸ்தானியர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக "நியூயார்க் டைம்ஸ்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பின்லேடன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பாக, சிஐஏக்கு தகவல் அளித்தவர்கள் எனக் கருதப்படும் 5 பேர் ஐஎஸ்ஐயால் கைது செய்யப்பட்டனர் என்று பாகிஸ்தானில் உள்ள மேற்கத்திய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களின் நிலை என்னவாயிற்று என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பாகிஸ்தான் இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகளை சந்திக்க இஸ்லாமாபாதுக்கு கடந்த வாரம் வந்திருந்த சிஐஏ இயக்குநர் லியோன் பெனட்டா இந்த விவகாரத்தை எழுப்பியதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக