19 ஜூன், 2011

யுத்தம் அற்ற சூழ்நிலையில் அவசரகாலச்சட்டம் ஏன்?: அமரதுங்க

நாட்டில் யுத்தமொன்று இல்லாத சூழலில் அவசர காலச்சட்டத்தை தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதற்கான தேவை என்னவென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கேள்வியெழுப்புகின்றார்.

அவசர காலச்சட்டத்தை தொடர்ச்சியாக நீடிப்பதை எதிர்த்து ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளான எழுத்துச் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பவற்றை நசுக்குவதற்கான ஒரு உபகரணமாகவே அரசாங்கம் அவசர காலச்சட்டத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இந்நாட்டில் அவசர காலச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் அதனை நீண்ட காலம் தொடர்ச்சியாக அமுலில் வைத்திருந்த அரசாங்கம் இன்றைய அரசாங்கம் தான்.

ஆனால் அதன் மூலமான அரசியல் மற்றும் பொருளாதார இழப்புகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை.

நாட்டில் யுத்தமொன்று இல்லாத சூழலில் அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் அமுலில் வைத்திருந்து நாட்டு மக்களின் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதிக்காது உடனடியாக அவசர காலச்சட்டத்தை தளர்த்த அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் அவர் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக