16 மார்ச், 2011

வான் புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு அமெரிக்காவிடம் உதவி கோரிய இலங்கை: விக்கி லீக்ஸ் தகவல்



தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது வான் பாதுகாப்பு முறைமையை பலப்படுத்துவதற்காக அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியதாக விக்கி லீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை புலிகளின் விமானங்கள் தாக்கியதை இந்தியா வழங்கிய ராடர்கள் மூலம் தடுக்க முடியாமல் போனதையடுத்து அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2007 மார்ச் 30ஆம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக்கை அழைத்த பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ எதிர்காலத்தில் எல். ரி. ரி. ஈ. யின் வான் தாக்குதல்களுக்கு எதிராக எவ்வாறு வான் பாதுகாப்பை பலப்படுத்தலாம் என ஆராய்வதற்காக அமெரிக்க இராணுவ குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்தாராம்.

கட்டுநாயக்க விமானப் படைத் தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்திய சில நாட்களில் இச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இத்தாக்குதலால் இந்தியாவினால் கடனாக வழங்கப்பட்ட இரு எம்.ஐ. 17 ஹெலிகள் உட்பட பல ஹெலிகள் சேதமடைந்திருந்தன. அவ்வேளையில் புலிகளின் விமானங்களை இந்திய ராடர்கள் கண்டறிய தவறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும் இலங்கை அரசாங்க அதிகாரிகள் அதை மறுத்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கையின் ராடர்கள் புலிகளின் வான் அச்சுறுத்தலை தடுக்க போதுமானவை அல்ல என அமெரிக்கத் தூதுவரிடம் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்ததாக 2007 ஏப்ரல் முதலாம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் அனுப்பப்பட்ட இரகசிய கேபிள் குறிப்புக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக