29 மார்ச், 2011

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் உயிரிழப்பு: சாவகச்சேரியில் சம்பவம்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் குப்புலான் தெற்கைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன் (வயது28) என்ற ஆசிரியரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.

தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த இவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

குறித்த ஆசிரியர் சம்பவ தினம் மாலை 5.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறை வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அருகில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் மது அருந்தியுள்ளார். அந்த மதுமான நிலையத்திற்கு வருமாறு தனது நண்பருக்கும் இவர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதனை குறித்த நண்பரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இதன் பின்னர் யாழ். பல்கலைக்கழகத்திற்கு சென்ற ஆசிரியர் சக்தி தரனை பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் கும்புளானைச் சேர்ந்த ஒருவர் அதிக மதுபோதையில் ஆசிரியர் இருந்தமையினால் தொடர்ந்து பயணிக்க வேண்டாம் எனக் கூறி மறித்துள்ளார். அங்கிருந்து இரவு 7.30 மணியளவில் வெளியேறிய ஆசிரியரை மறித்த சிலர் அவரைத் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்தே குறித்த ஆசிரியர் ஆரியகுளம் சந்திப்பகுதியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் மீது சீருடை தரித்தவர்களே தாக்குதல் நடத்தியதாக இணைய தளமொன்று செய்திவெளியிட்டுள்ளது. இதனை படைத்தரப்பினர் உறுதிப்படுத்தவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக