30 மார்ச், 2011

ஒத்திவைத்த 23 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலை மே மாதத்தில் நடத்த ஆலோசனை

நாடளாவிய ரீதியில் இருக்கின்ற 335 உள்ளூராட்சி மன்றங்களில் ஒத்திவைக்கப்பட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் ஜனாதிபதியினால் ஒத்திவைக்கப்பட்ட 23 மன்றங்களுக்கான தேர்தலையே அரசாங்கம் மே மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

10 ஆவது உலக கிண்ணப்போட்டிகள் நடைபெற்ற விளையாட்டரங்கள்கள் இருக்கின்ற பிரதேசங்களை அண்மித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களே ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதில் 17 மாநகர சபைகள், ஒரு நகர சபை மற்றும் ஐந்து பிரதேச சபைகளும் அடங்குகின்றன. அரசாங்கம் மொத்தமாக 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்திவைத்திருந்த போதிலும் மே மாதத்தில் 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அறிவிப்பு தேர்தல்கள் திணைக்களத்தினால் இவ்வாராத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாரத்திற்குள் வேட்பு மனுத்தாக்கல் அறிவித்தல் விடுக்கப்படுமாயின் தமிழ்சிங்கள புத்தாண்டிற்கு பின்னர் வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் வேட்பு மனுக்களுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள மன்றங்களை தவிர்த்து ஏனைய 234 உள்ளூராட்சிகளுக்கான வாக்களிப்பு கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 205 சபைகளை தம்வசப்படுத்தி அமோக வெற்றியீட்டிக்கொண்டதுடன் ஐக்கிய தேர கட்சி 9 மன்றங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 12 உள்ளூராட்சி மன்றங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு உள்ளூராட்சி மன்றங்களையும், தேசிய காங்கிரஸ் இரண்டு சபைகளையும் மலையக மக்கள் முன்னணி ஒரு சபையையும் கைப்பற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக