14 ஜனவரி, 2011

இலங்கைக்கேற்ற தீர்வை காண இந்தியா உதவினால் வரவேற்போம் - ஜனாதிபதி




* யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்டோர் விரைவில் சட்டத்தின் முன்

* இனங்களிடையே பகைமை ஏற்படுத்த முயன்றால் கடும் நடவடிக்கை

* விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த இன்னும் இரண்டு வாரங்களில் நடவடிக்கை!



முப்பது ஆண்டுகால யுத்தத்தின்போது நாட்டில் அராஜகம் புரிந்த எல். ரீ. ரீ. ஈ. இயக்கத்தையும் அதன் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஒழித்துக் கட்டி எங்கள் நாட்டில் மீண்டும் சமாதானத்தையும் அமைதியையும் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கப்பாட்டையும் ஏற்படுத்திய எனது அரசாங்கம் எக்காரணங் கொண்டும் மீண்டும் அந்தப் படுபயங்கர கொலையாளியான பிரபாகரனின் இலட்சியக் கனவை நிவைவேற்றுவதற்கு எவராவது முயற்சிகளை எடுத்தால் அவற்றை கடுமையான முறையில் செயற்பட்டு ஒழித்துக் கட்டிவிடும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுக் காலை (13) ஊடகங்களின் உயர் அதிகாரிகளையும் பத்திரிகை ஆசிரியர்களையும் சந்தித்துப் பேசியபோது கூறினார்.

எமது தேசிய ஊடகங்களுக்கு நாட்டு மக்களிடையே இன ஒற்றுமையையும் நல்லுறவையும் பேணிப் பாதுகாப்பதற்கான ஒரு சமூகப் பொறுப்பு இருக்கின்றது. அரசாங்கத்தை அரசியல் லாபம் தேடும் எண்ணத்துடன் வேண்டுமென்றே தப்பான முறையில் கண்டித்து எழுதுவதன் மூலம் இன்று மக்களிடையே வலுவடையும் ஒற்றுமைக்குத் தீங்கு இழைக்கக் கூடாது என்று ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஊடகங்கள் விரும்பினால் என்னையும் எனது அரசாங்கத்தையும் கண்டித்து எழுதலாம். ஆனால் அவர்கள் எழுப்பும் கண்டனக் குரல் இந்நாட்டு மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.

எனவே, இது விடயத்தில் ஊடகங்கள் குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகைகள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தில் குறுக்குக் கேள்வி ஒன்றை எழுப்பிய ஓர் ஊடகவியலாளர், நாட்டுப்பற்றற்ற முறையில் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்த முயற்சி செய்யும் சில ஊடகங்கள், இணையத்தளங்கள், குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகைகள் மீது, ‘உங்கள் அரசாங்கம் ஏன் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுத்து தண்டிக்க முடியாது’ என்றார்.

அதற்குப் பதில் அளித்த ஜனாதிபதி, அவ்விதம் செயற்படுவதற்கு எனது அரசாங்கத்திற்குச் சட்டபூர்வமான அதிகாரம் இருக்கின்ற போதிலும், நாம் அவ்விதம் செயற்பட்டால் இலங்கை அரசாங்கம், ஊடகச் சுதந்திரத்தை அழித்துவிட்டது என்றும், போர்க் குற்றச் செயல்களை இழைக்கின்றதென்றும் எங்கள் அரசாங்கத்தின் மீதும் அதன் தலைவர்கள் மீதும் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் சர்வதேச ஊடகங்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பி எங்களை மின்சாரக் கதிரையில் அமர்த்தி தண்டிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடும் என்று கூறினார்.

தமிழ்ப் பத்திரிகைகள் இனிமேலாவது எல். ரீ. ரீ. ஈ. அமைப்பின் கைப்பொம்மைகளான வெளிநாட்டு நாசகார சக்திகளை ஆதரிக்கும் கொள்கையைக் கைவிட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் மீண்டும் வகுப்புவாதத்தையும் இனங்களுக்கிடையே பகைமை உணர்வையும் ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிராக நான் கடுமையாக நடந்துகொள்வேன்.

யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்றும் அரசாங்கத்தினால் அதனைக் கட்டுப்படுத்த முடியாது இருக்கிறதென்றும் ஓர் அரச விரோத செயற்பாடு இப்போதும் நடந்து வருகிறது.

உலகின் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்காவிலும் நாளாந்தம் படுகொலைகள் இடம்பெறுகின்றன. சமீபத்தில் ஓர் அமெரிக்க செனட்டர் சுடப்பட்டார்.

இலண்டன் மாநகரிலும் இந்த வன்முறைகள் நாளாந்தம் இடம்பெறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றிக் கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் கொள்ளை, கொலை, ஆட்கடத்தல் போன்ற வன்முறைகள் இடம்பெறுகின்றன.

எனது அரசாங்கம் இப்போது பாதாள உலகக் கோஷ்டிகளையும் வன்முறைகளில் ஈடுபடுபவர்களையும் கைதுசெய்து இருப்பதனால் நாட்டில் இப்போது குற்றச் செயல்கள் குறைந்துள்ளன.

எல். ரீ. ரீ. ஈ. இயக்கமே எங்கள் நாட்டில் போதைவஸ்துக்களின் பயன்பாடு அதிகரிப்பதற்குப் பின்னணியில் இருந்து கோடானு கோடி ரூபாய்களை இலாபமாகத் திரட்டியது. அப்போது கைகட்டி மெளனம் சாதித்துக்கொண்டிருந்த தமிழ் ஊடகங்கள் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டுவது நியாயந்தானா? என்று நான் அவைகளைக் கேட்க விரும்புகிறேன்.

தேசிய கீதத்தைத் தமிழில் பாடுவதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? என்று ஓர் ஊடகவியலாளர் கேட்டபோது, அப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதென்றே எனக்குத் தெரியாது என்று பதில் அளித்த ஜனாதிபதி, ஊடகங்களே இத்தகைய பிரச்சினைகளைக் கிளப்பி அரசாங்கத்தின் மீது பழிபோட எத்தனிக்கின்றன என்றார்.

இப்போது ஊடகங்கள் அழகிய இளம் பெண்கள் குட்டைப் பாவாடைகளை (மினி ஸ்கேட்) அணியக் கூடாதென்ற சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அரசாங்கம் பதில் அளிக்கப் போவதில்லை என்றார்.

அதேபோன்று அரசாங்கத்திற்கு எதிராக எத்தனையோ போலி பிரசாரங்கள் இன்று சில தீய சக்திகளினால் நாடெங்கிலும் பரப்பப்படுகின்றன. அவற்றுக்கு நான் பயப்படப் போவதுமில்லை; பதில் அளிக்கப் போவதும் இல்லை என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்படுமா? என்று ஓர் ஊடகவியலாளர் கேட்டதற்குப் பதில் அளித்த ஜனாதிபதி மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் மாத்திரமே வெள்ளத்தினால் இப்போது பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ள நீர் வடிந்துசென்ற பின்னர் நாம் அதுபற்றிய நிலைமையை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்போம் என்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என்பதைத் திட்டவட்டமாக எடுத்துரைக்க விரும்புகிறேன் என்றார்.

நாம் தேர்தலை நடத்தாமல் இருந்தால் எங்கள் நாட்டு மக்களுக்குத் தங்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாய்ப்பு நிச்சயம் ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களுக்கு இல்லாமற் போய்விடும் என்றும் கூறினார்.

விகிதாசார முறையில் தேர்தல்களை நடத்தினால் ஒரே கட்சி வேட்பாளர்களுக்கு இடையிலேயே குத்து வெட்டும் இரத்தக் களரிகளும் இடம்பெறுன்றன. ஆகவே நான் கூடியவரையில் அடுத்து வரும் தேர்தல்களைத் தொகுதி வாரியாக நடத்த விரும்புகிறேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.

தமிழ்த் தேசிய கூட்டணியுடன் அரசாங்கத் தலைவர்கள் சமீபத்தில் சந்தித்ததைப் பற்றி ஒருவர் கேள்வி எழுப்பியபோது, இத்தகைய சந்திப்புகள் நாட்டில் ஜனநாயகத்தையும் சகஜ நிலையையும் இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையுமென்று நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று கூறினார்.

யாழ்ப்பாணத்தில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை இப்போது பொலிஸார் அடையாளம் கண்டுள்ளார்கள். விரைவில் கைதுசெய்து அவர்களை சட்டபூர்வமாகத் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் ஜனாதிபதி கூறினார்.

நாம் ஆயுதந்தாங்கி அரசாங்க படைகளுக்கு எதிராக யுத்தம் புரிந்த எல். ரீ. ரீ. ஈ.யினரைக் கைது செய்து அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்த பின்னர் அவர்களில் பெரும்பாலானோரை மிகக் குறுகிய காலத்தில் விடுவித்து அவர்களுக்கு வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, 1971 ஆம் ஆண்டில் சிங்கள இளைஞர்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அவர்களையும் கைது செய்து அன்றைய சுதந்திரக் கட்சி அரசாங்கம், அவர்களுக்கு மூன்றாண்டு காலம் புனர்வாழ்வு அளித்த பின்னர் மன்னிப்பளித்து விடுதலை செய்தது என்று சொன்னார்.

1989 ஆம் 1990 ஆம் ஆண்டுகளில் ஜே. வி. பி. கிளர்ச்சியின் போது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அவ்விதம் மனிதாபிமான முறையில் நடந்துகொள்ளவில்லை. அந்த ஐ. தே. க அரசாங்கம் அன்று குற்றமிழைத்த ஒரு சில சிங்கள இளைஞர்களையும் ஒரு பாவமும் அறியாத பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களையும் பொது இடங்களிலும் வீதிகளிலும் டயர்களை எரித்துத் தகனம் செய்தார்கள் என்று ஜனாதிபதி கூறினார்.

லீடர் பத்திரிகையின் பிரதிநிதி ஒருவர், தங்கள் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைசெய்யப்பட்டு இரண்டாண்டு காலம் கடந்துவிட்டபோதிலும் குற்றம் இழைத்தவர்களை இன்னும் கைது செய்யவில்லையே! என்று கேட்டார்.

அதற்கு ஜனாதிபதி அதுபற்றி உங்களிடம் ஏதாவது ஆதாரம் இருந்தால் நான் அவர்களைப் பிடித்துத் தண்டிப்பேன், இந்தக் கொலையாளிகளைத் தண்டிப்பதற்கு எனது அரசாங்கத்திற்கு அதிக ஆர்வம் இருக்கிறது என்றும், முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் கொலை விசாரணையும் இழுபறியிலேயே உள்ளது.

நாட்டில் இப்போது உணவுப் பண்டங்கள் மற்றும் பாவனைப் பொருள்களின் விலை அதிகரித்து வருவதைத் தடுப்பதற்காக இராணுவத்தினரையும் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் சிவில் பணிகளில் ஈடுபடுத்தியபோது அதற்கும் சில ஊடகங்கள் என்னையும் எனது அரசாங்கத்தையும் கண்டித்து எழுதுகின்றன என்றார்.

மலிவு விலை கடைகளைக் (கிசீனீஹீலீசி ஷிகீச்ஙீஙூ) குத்தகைக்கு எடுப்பவர்கள் மற்றவர்களுக்குக் கூடிய வாடகைக்குக் கொடுப்பதனால், பொருள்களின் விலை அங்கு அதிகரித்து இருக்கிறதென்றும், தரகர்களும் இந்த விலை அதிகரிப்புக்குப் பின்னணியில் இருக்கிறார்கள் என்று ஓர் ஊடகவியலாளர் கேட்டதற்கு பதில் அளித்த ஜனாதிபதி இன்னும் இரண்டு வாரங்களில் வர்த்தக அமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியளித்தார்.

இந்தத் தடவை நாம் ஒரு நெல் மணியையாவது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யாமலேயே அரிசி விலை ஏற்றத்திற்கு இடமளிக்காமல் அவதானமாக நடந்து கொண்டோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

ஊடகங்கள் சமீபத்தில் பிரதம நீதியரசரைத் தாம் கண்டித்துப் பேசியதனால் அவர் மனமுடைந்து பதவியை இராஜினாமா செய்துவிட்டார் என்ற வதந்திகளைப் பரப்பப்கூடிய செய்திகளை வெளியிட்டன என்று கூறிய ஜனாதிபதி, ‘நான் எனது இரண்டாவது தவணை பதவிக்காலத்திற்கான பதவிப் பிரமாணத்தைப் பிரதம நீதியரசரின் முன்னிலையில் செய்துகொண்டதன் பின்னர் அந்த நல்ல மனிதரை நான் இன்னும் சந்திக்கவே இல்லை என்றும், இவ்விதம்தான் ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செய்திகளையும் வதந்திக ளையும் பரப்பி தூபமிடுகின்றன என்றும் ஜனாதிபதி அவர்கள் கண்டனம் தெரி வித்தார்.

உலக கிரிக்கெட் கிண்ணத்திற்கான போட்டிகள் நடைபெறும் இலங்கை மைதானங்களின் திருத்த வேலைகள் சீரற்ற காலநிலையின் காரணமாக சற்றுத் தாமதமானாலும், அந்தப் பணிகள் விரைவில் முடிந்துவிடும் என்று கூறினார்.

எரிச் சோல்ஹெய்ம் இலங்கை வருவதை நான் தடுக்கவில்லை. அவர் தாராளமாக இங்கு வந்துபோகலாம். அவரது இலட்சியக் கனவு நிறைவேறவில்லை என்பதையும் இன்று நாட்டில் யுத்தமின்றி மக்கள் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டுவதற்கான ஒரு வாய்ப்பை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நான் அனைத்து ஊடகங்களையும் குறிப்பாகத் தமிழ் ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன். தயவுசெய்து நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த உதவி செய்யுங்கள். தமிழ் மக்களின் வேதனை வடுக்களை சுகப்படுத்துங்கள். அவர்கள் மத்தியில் வெறுப்புணர்வையும் பழிவாங்கும் எண்ணங்களுக்கும் தூபமிடாதீர்கள். இவ்விதம் தமிழ்ப் பத்திரிகைகள் அரசாங்கத்திற்கு உதவி செய்ய முன்வராவிட்டால், நாட்டில் இனங்களிடையேயான பகைமை உணர்வு நீங்காது என்று கூறினார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சமீபத்தில் என்னைச் சந்தித்தபோது, கிளிநொச்சியில் உள்ளவர்களுக்குத் தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நிதி உதவி வழங்க வேண்டுமென்று கேட்டபோது, நான் அங்குள்ள 27 ஆயிரம் பேருக்கு இலங்கை வங்கியின் மூலம் இரண்டரை பில்லியன் ரூபாவை இலகு கடனாக வழங்கினேன். அம்பாந்தோட்டையில்கூட நாங்கள் இவ்விதம் மக்களுக்கு உதவி செய்யவில்லை என்று ஜனாதிபதி கூறினார்.

இந்திய அரசாங்கமும் சீன அரசாங்கமும் நாட்டின் வடபகுதியில் புனர்வாழ்வு நடவடிக்கை செய்வதற்கும் மீள் நிர்மாணம் செய்வதற்கும் எமக்கு கோடானு கோடி ரூபாய்களை இலகு கடனாக வழங்கி உதவி செய்கின்றன. இந்நாடுகளுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கின்றோம் என்று சொன்னார்.

ராகுல்காந்தி தனது கைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், தான் இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளாரே என்று ஓர் ஊடகவியலாளர் கேட்டதற்குப் பதில் அளித்த ஜனாதிபதி,

இந்தியா எங்களுக்கு எத்தனையோ வகையில் உதவி செய்திருக்கிறது. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவி செய்திருக்கிறது.

தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவி செய்வதையும் வரவேற்போம்.

ஆனால், அது ஓர் இலங்கைத் தீர்வாக இருக்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பு முடிவுறும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன. யார் வேண்டுமானாலும் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்லலாம். ஆனால், சுதந்திரக் கட்சியினர் நிச்சயம் செல்லமாட்டார்கள். எங்களுடன் இணைந்துகொண்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களும் இங்குள்ள வசதிகளையும் சலுகைகளையும் விட்டுவிட்டுச் செல்லமாட்டார்கள் என்று தமது ஆசனத்திலிருந்து எழுந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக