13 நவம்பர், 2010

நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படுவதற்கு, மத்தியில் அதிகாரப் பரவலாக்கம் அவசியம் : புத்திஜீவிகள்

நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்படுவதற்கு, மத்தியில் அதிகாரப் பரவலாக்கம் இடம்பெறவேண்டும். அத்துடன் தமிழ்மொழி அமுலாக்கம் உரியமுறையில் இடம்பெறவேண்டும். இனங்களுக்கிடையில் புரிந்துணர்வும் நம்பிக்கையும் ஏற்படும் வகையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படுவது அவசியம் என்று யாழ். மாவட்ட புத்திஜீவிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் அமர்வில் நேற்று மாலை சாட்சியமளிக்கையிலேயே யாழ். மாவட்ட புத்திஜீவிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அமர்வில் முதலில் சாட்சியமளித்த கலாநிதி. ஜீவரத்தினம் ஹூல் கூறியதாவது:–

2006ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டேன். எனினும் புலிகள் எனக்கு அச்சுறுத்தல் விடுத்தமையினால் நான் நாட்டைவிட்டு வெளியேறினேயே. ஆனால் இலங்கையில் இருந்து வெளியேறியவர்கள் தேசிய நல்லிணக்கத்தை முன்னிட்டு மீண்டும் இலங்கை திரும்பவேண்டுமென ஜனாதிபதி விடுத்த அழைப்புக்கேற்ப நான் மீண்டும் இலங்கை வந்தேன். நாட்டிலிருந்து வெளியேறிய ஏனைய மக்களில் அதிகமானோரும் இங்கு வந்து சேவையாற்றுவதற்கு எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

நாங்கள் ஒரு ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும். அத்துடன் எமது கடந்தகால தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை நிராகரித்தமையானது புலிகள். தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட பாரிய காட்டிக்கொடுப்பாகும்.

அதிகாரப்பரவலாக்கம்

எனவே தற்போதைய நிலைமையில் நாட்டில் அதிகாரப்பரவலாக்கம் இடம்பெறவேண்டும். அதாவது உள்ளக ரீதியில் அதிகாரப்பரவலாக்கம் வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும். ஆனால் அரசியல் தீர்வொன்றை முன்வைக்கும் விடயமானது அரசாங்க மட்டத்தில் தாமதப்படுத்தப்படுவதாகவே நாங்கள் உணருகின்றோம். அது அப்படி நடக்கக் கூடாது. விரைவில் அதிகாரப் பரவலாக்கம் முன்வைக்கப்பட வேண்டும்.

கூட்டமைப்பு

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். இது மிகவும் தேவையானது. சரத்பொன்சோகாவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முடியுமானால் ஏன் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியாது?

இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அரசாங்கம் நெருக்கமாக பணியாற்ற வேண்டும். அவர் யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையான மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். மக்களின் ஆதரவு அதிகமாகவே அவருக்கு இருக்கின்றது. அதாவது ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றேன்.

யுத்தத்தின்போது அதிகளவான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனவே இவை தொடர்பிலான நட்டஈடுகள் வழங்கப்படுவது அவசியமாகும். தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா நியமித்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை இந்த இடத்தில் நினைவூட்டுகின்றேன்.

13 ஆவது திருத்தம்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கு அமைவாக மாகாணசபை முறைமை சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நாங்கள் தீர்வொன்றிற்கு செல்வதற்கு முன்னர் சட்டத்தில் இருக்கின்ற அம்சத்தை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். முக்கியமாக நாம் அனைவரும் பொதுவான இலங்கையர் என்ற அடையாளம் உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ் மொழி

இதேவேளை தமிழ் மொழிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். தமிழ்பேசும் மக்கள் தமது விடயங்களை தமது மொழியிலேயே கையாளுவதற்கும் அரசாங்கத்துடன் தமிழ் மொழியிலேயே செயற்படுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படுவது கட்டாயமாகும். அரச நிர்வாகத்தில் தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் வளங்கப்பட வேண்டும் என்றார்.

தோல்விகண்ட உடன்படிக்கைகள்

தமிழ் அரசியல் தலைவர்கள் அனைத்து சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துடன் பேசி நியாயமான தீர்வுக்கு வர முற்பட்டுள்ளனர். ஆனால் அவை வெற்றிபெறவில்லை. பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஆகிய உடன்படிக்கைகளை குறிப்பிடலாம். –அதேபோல் போர் நிறுத்த உடன்படிக்கையும் தோல்வியடைந்தது. இரண்டு தரப்பினரும் சந்தேகத்துடனேயே இருந்தனர் விளைவாக, மனித உயிர்களும் சொத்துக்களும் அழிவடைந்தன. சுற்றாடலும் பாதிக்கப்பட்டது.

மக்களின் அபிலாசைகள்

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை கூட வெளிவரவில்லை. 30 வருடகால யுத்தம் முடிவடைந்துள்ளது. ஆனால் தமிழ் மக்களின் அபிலாøஷகள் பூர்த்தியடையவில்லை. உண்மையான சமாதானமும் அமைதியும் நாட்டில் ஏற்பட வேண்டுமானால் நியாயமான தீர்வு முன்வைக்கப்படவேண்டும். தமிழ் மக்கள் தமது விடயங்களை கையாளும் வகையில் ஐக்கிய இலங்கைக்குள் இந்தத் தீர்வு இருக்கவேண்டும். இது இடம்பெறாதவøர அமைதி, சமாதானம் என்பவற்றை எதிர்பார்ப்பது கடினம். அத்துடன் அதிகாரப் பரவலாக்கலும் மிகவும் முக்கியமானது. காலதாமதமின்றி அது அமுல்படுத்தப்படவேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக