18 நவம்பர், 2010

புதிய அமைச்சரவையின் போது அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிக்கும்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சரவை மாற்றத்துக்கான இறுதி ஏற்பாடுகளில் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர்களும் ஈடுபட்டுவருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்துக்காக நாளை வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ள நிலையிலேயே எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது தற்போது காணப்படுகின்ற அமைச்சுப் பொறுப்புக்களில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய அமைச்சரவை மாற்றத்தின்போது ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் அதன்படி தற்போதைய அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

கண்டி, பதுளை, காலி, குருணாகல், கேகாலை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு புதிய அமைச்சுப் பதவிகள் பகிரப்படும் என ஆளும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

அண்மையில் அரசியமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டம் அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டபோது அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய தேசிய கட்சியின் சில எம்.பி. க்களுக்கு அமைச்சுப் பதவியும் பிரதி அமைச்சுப் பதவியும் வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இதுவரை காலமும் பிரதி அமைச்சர் பதவியை வகித்தவருகின்ற சிலருக்கு அமைச்சுப் பதவி கிடைக்கலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை சுப நேரத்தில் புதிய அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.

ஐ.தே.க.விலிருந்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ள லக்ஷ்மன் செனவிரட்ன, அப்துல் காதர், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அரசாங்கத்தில் பிரதிமைச்சர்களாக பதவி வகிக்கும் சரத் அமுனுகம ரஞ்சித் சியம்பளாபிட்டிய ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என நம்பகரமாக தெரியவருகின்றது.

ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஷபக்ஷவுக்கு இளைஞர் விவகாரத்துடன் தொடர்புடைய அமைச்சு ஒன்று வழங்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஆளும் கட்சிக்கு ஆதரவு வழங்கிய எம்.பி. க்களான பிரபா கணேசன் எம். திகாம்பரம் ஆகியோருக்கு பிரதி அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் இதுவரை அதற்கான சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது.

அமைச்சுப் பதவி விடயத்தில் ஆளும் கட்சியில் புதிதாக நியமனம் பெற்ற எம்.பி. க்களும் தற்போது அமைச்சர்களாக பதவி வகிக்கும் சிலரும் அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிகின்றது. அமைச்சுப் பதவிகளை உரிய முறையில் செயற்படுத்தாக சில அமைச்சர்களுக்கு பொறுப்புகள் மாற்றப்படவுள்ளன. இதற்கான உத்தரவுகளை ஜனாதிபதி விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பிரதமர் பதவியில் மாற்றம் இருக்காது என்றும் பிரதமராக டி.எம். ஜயரட்ணவே தொடர்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஏப்ரல் மாதம் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பின்போது டி.எம். ஜயரட்ண பிரதமராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். அத்துடன் தற்போதைய அமைச்சரவையும் அன்றைய தினமே பதவியேற்றிருந்தது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த முக்கிய அமைச்சர் ஒருவர் ஜனாதிபதி பதவியேற்பின் பின்னர் புதிய அமைச்சரவை பதவியேற்பது வழமையாகும் என்று தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தடவை பதவிக் காலத்துக்கான பதவியேற்பு விழா நாளை வெள்ளிக்கிழமை பழைய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ( தற்போதைய ஜனாதிபதி செயலகம்) நடைபெறவுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. திங்கட்கிழமை காலை வேளையில் புதிய அமைச்சரவை பதவியேற்பும் பிற்பகல் வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக