6 அக்டோபர், 2010

யாழ். போதனா வைத்தியசாலைக் கட்டிடத்தில் 'லிப்ட்' இன்றி நோயாளர் பாதிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 'லிப்ட்' பொருத்தப்படாததால் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த மாதம் முதல் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டுப் புதிய கட்டிடம் நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் பழைய கட்டிடங்களில் இயங்கிய உள்ளக நோயாளர்களின் பல விடுதிகள், அண்மையில் புதிய கட்டிடத் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்தக் கட்டிடத்தில் 12 விடுதிகளுக்கு மேல் இயங்குகின்ற போதிலும் மாடிகளுக்குச் செல்வதற்கு 'லிப்ட்' வசதி இல்லை. இதனால் முதியவர்களும் நோயாளர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளர்களை, தொண்டர் சேவை ஆற்றும் இலங்கை செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் இலங்கை சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவையாளர்கள் மேல் மாடி விடுதிகளுக்குத் தூக்கிச் செல்கின்றனர்.

ஏற்கனவே குறிப்பிட்ட கட்டிடத்திற்கு நோயாளர்கள் மாற்றப்படவுள்ளமை தெரிந்திருந்த போதிலும், அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால் இத்தகைய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக