12 செப்டம்பர், 2010

ஐ.தே.கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவால் சஜித் எதிர்க்கட்சித் தலைவராகலாம்?

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது அதிருப்தியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபையில் சுயமாக இயங்குவது குறித்து ஆராயும் அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவை தெரிவு செய்யப்போவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்துள்ளன. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை ஆளுந்தரப்புக்கும் சங் கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

25 உறுப்பினர்களுடன் இரண்டாவது சக்தியாகத் தாம் திகழப்போவதாகவும் அதிக உறுப்பினர்களைக் கொண்டவர்கள் என்ற ரீதியில் தமது தரப்பிலிருந்தே எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கும் அதற்கான அங்கீகாரத்தைச் சபாநாயகரிடம் பெற்றுக் கொள்வதற்குமாக அனைவரது ஒப்பங்களையும் கொண்ட இணக்கக் கடிதமொன்று தயாரிக்கும் வேலைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரி வித்தன. எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸவை நியமிப்பது குறித்து அவரது விருப்பத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அவருடன் முக்கியஸ்தர்கள் விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

இதேவேளை, 18 ஆவது அரசியல் யாப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தன்று ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து ஆளும்தரப்புடன் இணைந்து கொண்ட ஆறுபேரையும் தமது அணியில் இணைத்துக்கொள்வது குறித்தும் அதிருப்தியாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் இணையும்போது அதிருப்தியாளர் அணியின் எண்ணிக்கைக 31 ஆக அமையும்.

காமினி ஜெயவிக்ரம பெரேரா

இது இவ்வாறிருக்க, 18 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து ஐக்கிய தேசிய கட்டசிக்குள் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதனை ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தவிசாளருமான காமினி ஜயவிக்கிரம பெரேரா ஏற்றுக் கொண்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுடன் ஒரு சில ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயேச்சையாக அமரவிருப்பதை தன்னால் முடிந்தவரை நிறுத்துவதற்கான பிரயத்தனங் களைத் தாம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கபீர் ஹாஸிம்

இது தொடர்பில் வீரகேசரி வாரவெளியீட்டுக்குக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் முக்கியஸ்தருமான கபீர்“ ஹாஸிம், கட்சிக்குள் நிறையவே பிரச்சினைகள் உள்ளன. இப்போது அவை கூடிவிட்டன. பிரச்சினைகளை பேசித் தீர்த்து கட்சியைப் பிளவடையச் செய்யாமல் பாதுகாக்கவே முயல்கிறோம். ஆனால், கட்சித்தலைமை தொடர்பில் நிறையவே அதிருப்தியுள்ளன. இதில் மாற்றம் வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் கருத்தாகவுள்ளது. இந்த விடயத்துக்குத் தீர்வு காணாவிடின் பிளவு தவிர்க்கமுடியாது போய்விடும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக கரு ஜயசூரிய அல்லது சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படவேண்டு மென்றே பலரும் விரும்புகின்றனர். இதுவே எமது கட்சியின் பெரும்பாலானோரின் இன்றைய நிலை. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் 25 பேர் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுத்து மூலம் கேட்டிருந்ததனை அவர் நிராகரித்ததனையடுத்தே கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது.

சட்டவல்லுநர்கள் கருத்து

குறிப்பிட்ட ஒரு கட்சி மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு பின்னர் அவர்களில் பெரும்பகுதியினர் சுயமாக இயங்கும்போது தமது தரப்பிலிருந்தே ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவேண்டுமென்று கோரிக்கை விடுக்கும் பட்சத் தில் இறுதித் தீர்மானம் எடுப்பவராக சபாநாய கரே விளங்குவாரென இந்த விடயம் தொடர்பில் விளக்கமளித்த சட்ட வல்லுநனர்கள் தெரி வித்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவராக பெயர் குறிப்பிடப்படும் ஒருவரை நியமிக்கலாம் அல் லது அதனை நிராகரித்தும் விடலாம். ஆனால், இந்த இரு விடயங்கள் தொடர்பிலும் வாதப் பிரதிவாதங்கள் உள்ளன.

அரசுக்கும் சங்கடமான நிலை

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று ஏற்பட்டுள்ள பிளவு அரசாங்கத்துக்கு ஒரு சங்கடமான நிலையைத் தோற்றுவித்துள்ளதாகவும் ஆளும்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய பலவீனமான தலைமைத்துவம் தொடரும் வரை தேர்தல்கள் உட்பட அனைத்து விடயங்களிலும் தமது தரப்பு இலகுவாக வெற்றி பெற முடியுமென்ற நிலை இருக்கும்போது, எதிர்க்கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டு மக்கள் ஆதரவுமிக்க ஒருவர் தலைவராகத் தெரிவானால் அது ஒரு சவாலாக அமையலாமென ஆளும்தரப்பு நோக்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக